சென்னை,
தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சிறுபான்மையினர் நடத்தும் மக்கள் சார்ந்த கல்வி மற்றும் மருத்துவத் தொண்டு நிறுவனங்களை ஒடுக்கி முடக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்படும் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும்.
வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலால் பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக, நம் நாட்டில் பெட்ரோலியப் பொருள்களைச் சீராக விநியோகிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. மக்கள் பொருளாதாரச் சுமையால் பாதிக்கப்பட்டு, தவிக்கும் நிலை உருவாகி உள்ளது. எரிவாயு சிலிண்டர் கிடைக்காமல் உணவகங்கள் பலவும் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. மக்கள் சந்தித்து வரும் மிக முக்கியமான இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வு எதுவும் காணவில்லை. மாறாக, சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு இப்போது கொண்டு வருவது ஏன்?
இந்தச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வரும் ஒன்றிய அரசுக்கு எதிராக, மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரணியாகத் திரண்டு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, இந்த மசோதாவை ஒன்றிய அரசால் நிறைவேற்ற முடியவில்லை. ஆனாலும், இந்தச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன்? இக்கேள்விகள், மக்களிடம் இயல்பாக எழுந்துள்ளன.
சிறுபான்மையினரால் நடத்தப்படும் கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களால், லட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த நிறுவனங்களை முடக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலின் பேரில் கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
