பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தொடு உணர்வு மூலம் தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்திடும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் வாயிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, டாக்டர் ராதாகிருஷ்ணன் சட்டமன்றத் தொகுதி, தண்டையார்பேட்டை, ரெட்டைக்குழி தெருவில் உள்ள தமிழ்நாடு பார்வையற்றோருக்கான சங்கத்தில் (Tamilnadu Association of the Blind) உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தொடு உணர்வு (Braille) மூலம் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன், துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அங்குள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அங்கு அமைக்கப்பட்ட சுயபுகைப்பட (Selfie Point) பதாகை முன் நின்று புகைப்படம் எடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, அனைவரும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய தொப்பி மற்றும் டி-ஷர்ட் அணிந்து, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், வாக்காளர்களுக்கு தேர்தலில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link