ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்கவில்லை: கிரிக்கெட் வாரியம் மீது வழக்கு தொடர்ந்த பிரபல வீரர்

கொழும்பு,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அந்த வகையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாட இலங்கை வீரர் நுவன் துஷாரா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ரூ. 1.76 கோடிக்கு இவரை பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது. வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க அந்தந்த கிரிக்கெட் வாரியங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறுவது அவசியம். ஆனால், நுவன் துஷாராவுக்கு என்.ஒ.சி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க தனக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் மீது கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான தனது ஒப்பந்தம் மார்ச் 31, 2026 அன்று முடிவடைந்துவிட்டதாகவும், இதனால் தனக்கு ஐபிஎல் போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்துடனான தனது ஒப்பந்தத்தை புதுப்பிக்க விரும்பவில்லை என்றும் துஷாரா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம் என்றும் பேசப்படுகிறது. நுவன் துஷாரா தொடர்ந்த வழக்கு ஈஸ்டர் விடுமுறைக்குப் பிறகு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Source link