திருநெல்வேலி மாநகரம், மேலப்பாளையம், தெற்கு தைக்கா தெருவை சேர்ந்த நியாஸ்அலி மகன் நசிம்உசேன் (வயது 35). இவருடைய மனைவி கர்ப்பிணியாக இருந்து வந்ததாகவும், அவருக்கு பிரசவ தேதி நெருங்கிய நிலையில் அவரை மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு நிலைய மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் நசிம்உசேன் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், நேற்று இரவு நேரத்தில் மனைவிக்கு அவர் வீட்டில் வைத்து தானாகவே பிரசவம் பார்த்து, ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
இதனையடுத்து இறந்த பச்சிளம் குழந்தையின் உடலை காட்டு ஜிம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்து விட்டதாக, மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுமதி மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நசிம்உசேனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
