செல்போன் செயலியில் கடன்.. விண்ணப்பித்தவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து பணம் பறிப்பு

புதுச்சேரி,

புதுச்சேரி மூலக்குளத்தை சேர்ந்தவரின் செல்போனுக்கு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் அவரது நண்பர் எனக் கூறினார். மேலும் தனக்கு மருத்துவ சிகிச்சைக்காக அவசர தேவையாக ரூ.70 ஆயிரம் வேண்டும் என்றார். உடனடியாக அவரும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். அதன்பின் விசாரித்தபோது ஆன்லைன் மோசடி கும்பல் யாரோ அவரது நண்பர் போல்பேசி பணத்தை பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அரசூரை சேர்ந்த பெண் ஒருவரின் செல்போனுக்கு வந்த அழைப்பில் மறுமுனையில் பேசியவர் தன்னை வங்கி அதிகாரி என கூறி, அறிமுகம் செய்துகொண்டார். ஏ.டி.எம். கார்டை புதுப்பிப்பதாக கூறி அதன் விவரங்களையும், ரகசிய எண்ணையும் பெற்றுகொண்டார். அதன் பின் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.48 ஆயிரம் பணம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

முதலியார்பேட்டை சேர்ந்தவர், செல்போன் செயலியில் கடன் பெற, பதிவிறக்கம் செய்தார். அவரின் புகைப்படத்தை மோசடி கும்பல் ஆபாசமாக சித்தரித்து ரூ.7 ஆயிரத்தை மிரட்டி பறித்தனர். இதேபோல் ஆன்லைனில் ஜவுளி வாங்க பணம் செலுத்தி மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண் ரூ.3,648, ஒதியஞ்சாலை சேர்ந்த பெண்

ரூ.1,600 இழந்தனர். புதுச்சேரியில் நேற்று முன்தினம் 5 பேரிடம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்து மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link