‘தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்’ – செல்வப்பெருந்தகை

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் 28 தொகுதிகளில் போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான பணியில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவைத் தலைவர் ராகுல்காந்தி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி, தொகுதி பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

“தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என்னுடைய பணி முழுவதும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்காக மட்டுமே இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. தேர்தல் முடிவுகள் வந்தபிறகு எங்கள் அகில இந்திய தலைமையிடம் பேசி தொகுதி வேலையையும், தமிழ்நாட்டு வேலையையும் மட்டும்தான் பார்க்கப் போகிறேன்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு நூறு வெற்றியை பெற்றுத் தந்தோம். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் நூற்றுக்கு நூறு வெற்றியை பெறப்போகிறோம். பதவியை விட்டு விலகும்போது மனநிறைவோடு விலக வேண்டும். நான் மனநிறைவோடு மாநில தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்.

அதே சமயம், பதவி விலகக் கோரி எனக்கு எந்த அழுத்தமும் கிடையாது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூட நான் தலைவராக இருப்பேன். நான் எந்த பதவி கேட்டாலும் ராகுல் காந்தி கொடுப்பார். மாநில தலைவராக 2 ஆண்டுகளில் என்னென்ன பணிகள் செய்துள்ளேன் என்பது எங்கள் தலைவர்களுக்கு தெரியும்.

நான் காங்கிரஸ் மாநில தலைவராக இருந்த 2 ஆண்டுகளில் திட்டங்கள் தீட்ட முடிந்தது. ஆனால் உறவுகள் வைத்துக் கொள்வதில் நேரடியாக சில சிக்கல்கள் இருந்தன. தமிழ்நாட்டின் பிள்ளையாக 2 ஆண்டுகள் இருந்தேன். தேர்தலுக்கு பிறகு தமிழ்நாட்டின் பிள்ளையாக வேறு யாராவது இருப்பார். நான் ஸ்ரீபெரும்புதூர் குடும்பத்தின் பிள்ளையாக இருப்பேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link