தெஹ்ரான்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் உயிரிழந்தனர். இதையடுத்து, மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளம் உள்ள நாடுகள் மீதும், இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், 2 அமெரிக்க போர் விமானங்களை ஈரான் நேற்று சுட்டு வீழ்த்தியுள்ளது. அமெரிக்காவின் அதிநவீன எப்-15 ரக போர் விமானம் ஈரான் வான் எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் தரையிறங்கியுள்ளனர். இதில் ஒரு விமானியை அமெரிக்க படையினர் மீட்டுள்ளனர். எஞ்சிய ஒரு விமானியின் நிலை என்ன? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. அமெரிக்க விமானியை உயிருடனோ? சடலமாகவோ? பிடித்துக்கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்று ஈரான் அரசு அறிவித்துள்ளது. அதேவேளை, மாயமான விமானியை மீட்க அமெரிக்க படைகளும் முயற்சித்து வருகிறது.
அதேபோல், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்காவின் ஏ-10 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. போர் விமானத்தில் பயணித்த விமானியின் நிலை என்ன? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.
அதேவேளை, சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-15 போர் விமானத்தின் விமானியை மீட்க மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட 2 பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்களும் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் மத்திய கிழக்கில் தொடர் பதற்றம் நிலவி வருகிறது.
