போடி நாயக்கனூர் தொகுதியை மீண்டும் தக்கவைப்பாரா ஓபிஎஸ் என்ற எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள் இருந்து வருகின்றனர்.
அதிமுக கோட்டையில் ஓபிஎஸ்-ஸின் சவால்
போடிநாயக்கனூர் தொகுதி நீண்டகாலமாக அதிமுக-வின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. 1989-ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இங்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றது முதல், இத்தொகுதி அதிமுக-வின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் இங்கு 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வுடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, தற்போது அதே இரட்டை இலைச் சின்னத்தை எதிர்த்து அவர் போட்டியிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. “கட்சியில் ஓபிஎஸ்-ஸின் ஆதரவாளர்கள் இருந்தாலும், அவர்கள் கட்சியின் சின்னத்திற்கும் தலைமைக்கும் தான் விசுவாசமாக இருப்பார்கள்” என்று அதிமுக நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மாறிவரும் கூட்டணிகளும் கடந்தகால வரலாறும்
கடந்த 2021-ஆம் ஆண்டு தேர்தலில், ஓபிஎஸ் அவர்கள் திமுக-வின் தங்க தமிழ்ச்செல்வனை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமமுக-வில் இணைந்து, பின்னர் திமுக-விற்குச் சென்ற தங்க தமிழ்ச்செல்வன், ஓபிஎஸ்-ஸை வீழ்த்தவே போடியில் நிறுத்தப்பட்டார். அதன் பிறகு 2024 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஓபிஎஸ், ஐந்து போலி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையிலும் 3.42 லட்சம் வாக்குகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். தற்போது திமுக-வில் இணைந்துள்ள அவர், அதே பழைய எதிரியான அதிமுக-வை புதிய களத்தில் எதிர்கொள்கிறார்.
சமூகக் கட்டமைப்பும் தேர்தல் கணிப்புகளும்
பல்வேறு சமூகத்தினர் போடிநாயக்கனூர் தொகுதியில் பரவலாக உள்ளனர். இந்தச் சமூக வாக்கு வங்கிகளும், திமுக-அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பாரம்பரிய வாக்குகளுமே வெற்றியாளரைத் தீர்மானிக்கவுள்ளன. அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு அவருடைய சமூக வாக்குகளும் தங்களுக்குக் கைகொடுக்கும் என அதிமுக கருதுகிறது. மறுபுறம், சுமார் 20,000 வாக்குகள் கொண்ட குறிப்பிட்ட சமூகத்தினரின் ஆதரவு மற்றும் திமுக-வின் வாக்கு வங்கி ஆகியவை தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என ஓபிஎஸ் தரப்பு நம்புகிறது.
எதிர்ப்புகளும் ஆதரவுகளும்
“மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஒருவர், கட்சியை விட்டு விலகி எதிரணியில் சேருவதை மக்கள் எப்படி ஏற்பார்கள்?” என்று அதிமுகவினர் விமர்சிக்கின்றனர். அதேசமயம், திமுக தரப்பில் ஓபிஎஸ்-ஸின் வருகைக்குப் பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை எனத் தெரிகிறது. முன்னாள் திமுக எம்.எல்.ஏ லட்சுமணன் போன்றவர்கள் ஓபிஎஸ்-ஸிற்காகத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
வளர்ச்சிப் பணிகள்
குடிநீர் வசதி மேம்பாடு, பாதாளச் சாக்கடைத் திட்டம், அரசு கல்லூரிகள் போன்ற ஓபிஎஸ் செய்துள்ள வளர்ச்சிப் பணிகள் அவருக்குச் சாதகமாக அமையும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். திமுக அரசின் சாதனைகள் மற்றும் தேர்தல் அறிக்கையுடன் ஓபிஎஸ் களமிறங்குவது, போடிநாயக்கனூர் தொகுதியில் ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இத்தனை காலமும் எதிரியாக இருந்த உதயசூரியன் சின்னம், ஓபிஎஸ்-ஸைக் கரை சேர்க்குமா என்பது வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி தெரியவரும்.
