சேலம்,
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25 வயது). இவர் அதே பகுதியில் ஆன்லைன் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சினேகா (22 வயது). இவர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு யாசினி (2 வயது) என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று சினேகா வீட்டில் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சினேகா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாழப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சினேகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 4 ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இதுகுறித்து சேலம் உதவி கலெக்டர் மற்றும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் ஆகியோர் விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
