உத்தரகாண்ட்,
பௌரி மாவட்டத்தில் உள்ள பட்கோட் கிராமத்தில் இரவு சுமார் 9 மணியளவில் திருஷ்டி ராவத் என்கிற சிறுமி தனது சகோதரி மற்றும் பாட்டியுடன் வீட்டின் அருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த ஒரு சிறுத்தை அச்சிறுமியை தூக்கிக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிராம மக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் பின்னர் வீட்டிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அச்சிறுமியின் உடல் கடித்து குதறப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.
காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அச்சிறுமியின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளை அவர்கள் முதலில் தடுத்து நிறுத்தினர். வன அதிகாரி மகாதீம் யாதவ் சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து, விதிமுறைகளின்படி சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
வனத்துறை, சிறுத்தையைக் கண்காணிக்கவும் உள்ளூர் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் விரிவான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளின்படி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் இரண்டு நாட்கள்க்கு விடுமுறை என்று வட்டாரக் கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
