எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் – ராமதாஸ்

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எங்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரான ச.முரளி சங்கர் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று காலை 10:30 மணியளவில் வந்தவாசி நகரத்திலுள்ள அண்ணல் அம்பேத்கர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, கட்சி மற்றும் கூட்டணி அமைப்புகளின் தலைவர்களையும், முக்கியமானவர்களையும் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தபோது எங்களிடமிருந்து பிரிந்து சென்றவர்களை பின்தொடரும் மச்சேந்திரன், விக்கி, மும்முனி வேலு, சாலவேடு பாபு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நபர்கள் முரளி சங்கரின் காரை வழிமறித்து, கையைப் பிடித்து காரிலிருந்து கீழே இறக்கி, அநாகரிகமான, அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் திட்டி, “இனி நீ தொகுதிக்குள் வந்தால் வெட்டி கொலை செய்து விடுவோம்”, “நீ உயிரோடு திரும்பி போக முடியாது” என்று மிரட்டி, காரைத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியை அபகரிக்கும் நோக்கத்தில் இந்த தேர்தலை பயன்படுத்தி வருபவர்கள், உண்மையான பாட்டாளிகள் எங்கள் பக்கம் இருப்பதால், அது அவர்களுக்கு தோல்வியைத் தரும் என்கிற ஆத்திரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூட பாராமல் கொலை மிரட்டல் விடுப்பதும், சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாகவும், அநாகரிகமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டும் வருகின்றனர். கட்சியின் உயர் பொறுப்பான பொதுச் செயலாளர் பொறுப்பில் இருப்பவருக்கே இது போன்ற அச்சுறுத்தல்கள் நடப்பது அனுமதிக்க முடியாது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆதலால் அவருக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்கிட வேண்டும்.

மேலும், தேர்தல் நெருங்க, நெருங்க அவர்களின் அடாவடி, அநாகரிகமான செயல்கள் எந்த எல்லைக்கும் செல்லுமளவுக்கு அவர்களது செயல்பாடுகள் உள்ளன. கருத்தியல் ரீதியாகவோ, தங்களின் செயல்பாடுகளின் மூலமாகவோ மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியாதவர்கள், களத்தில் நிற்கும் வேட்பாளர்களையும், அவர்களுக்காக பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் அச்சுறுத்தியும், ஆசை காட்டியும் தேர்தல் பணிகளை முடக்கப் பார்க்கின்றனர்.

இதுபோன்ற அடாவடி செயல்கள், அத்துமீறல்கள், வந்தவாசி தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க எங்களது சார்பில் போட்டியிடுகின்ற ஒவ்வொரு தொகுதிகளிலும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனவே தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தேர்தல் பணிகளை செய்வோருக்கு கொடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களில் இருந்து நேர்மையாக தேர்தல் நடத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும். வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, தேர்தல் முடிவு அறிவிக்கின்ற வரையில் எங்களது தரப்பு வேட்பாளர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் கொடுப்பதோடு, தாக்குதல்கள் நடத்துவதற்கும் அவர்கள் பல்வேறு சதி திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

எனவே அந்தந்த மாவட்ட காவல்துறை உயரதிகாரிகள் எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link