திருச்சூர் மாவட்டம் சேலக்கரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் கே. பாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் சட்டவிரோதமாக செயல்படும் அமைப்புகளை குறிவைத்து இந்த வெளிநாட்டு நிதி பங்களிப்பு முறைப்படுத்துதல் (எப்.சி.ஆர்.ஏ.) சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரம் நேர்மையான முறையில் வெளிநாடுகளில் இருந்து பணம் கொண்டு வருவோர், இதுகுறித்து எந்த கவலையும் பட வேண்டியதில்லை.
இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேறும் முன்பு அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பா.ஜனதா தலைமை, தேர்தலுக்கு பிறகு இதற்காக டெல்லியில் அனைத்து மத தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கும்.
தேச பாதுகாப்புக்கு எதிராக செயல்படும் அமைப்புகள் மட்டுமே இதில் இலக்காக்கப்படும். கிறிஸ்தவ மத தலைவர்கள் இதுகுறித்து எங்களுடன் பேசி உள்ளனர். தவறு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சட்ட திருத்த மசோதா பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து மதத்தினரையும் நாங்கள் பாதுகாப்போம்” இவ்வாறு அவர் கூறினார்.
