கொங்கு மண்டலத்தில் கிருஷ்ணகிரியை மையப்படுத்தி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தற்போது இறுதி ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ள தகவல் பெரிதும் கவனம் பெறக்கூடிய விஷயமாக மாறியிருக்கிறது.
கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதை திட்டம்
இந்த இறுதிகட்ட ஆய்வறிக்கைக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் தொடர்ச்சியாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ஒருபுறமிருக்க, இதனால் ஏற்படும் பலன்கள் உள்ளிட்டவை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஜோலார்பேட்டை – ஓசூர் புதிய திட்டமா அல்லது விரிவாக்கமா?
முதல் உலகப் போர் சமயத்தில் திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி இடையில் 42 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் குறுகிய ரயில் பாதை இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது இந்த பாதை அகற்றப்பட்டது. அதன்பிறகு கிருஷ்ணகிரியை இணைக்கும் வகையில் ரயில் பாதையும் போடப்படவில்லை. ரயில் சேவையும் இல்லை.
கிருஷ்ணகிரி புதிய ரயில் பாதை திட்டத்தால் ஏற்படும் நன்மைகள்
இந்த மாவட்டத்தை பொறுத்தவரை ஓசூரின் தொழில் வளர்ச்சி என்பது மிக வேகமாக நடந்து வருகிறது. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் ஹப்பாக மாறியுள்ளது. இந்நிறுவனங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் புதிய ரயில் பாதை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்திய ரயில் வரைபடத்தில் கிருஷ்ணகிரி ஓர் அங்கமாக மாறும். இந்த பகுதியில் சூளகிரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி, பர்கூர், கந்திலி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.
ஜோலார்பேட்டை – ஓசூர் ரயில் பாதை திட்டத்தால் தீர்க்கப்படும் பிரச்சினைகள்
ஜோலார்பேட்டையில் இருந்து ஓசூர் செல்வதற்கு பெங்களூரு வழியாக சுற்றி செல்ல வேண்டியுள்ளது. கிட்டதட்ட 180 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதுவே கிருஷ்ணகிரி வழியே ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் 70 கிலோமீட்டர் தூரம் குறையும். வெறும் 109 கிலோமீட்டர் மட்டுமே பயணித்தால் போதும். எரிபொருள், நேரம், பணம் மிச்சமாகும்.
சென்னை – பெங்களூரு ரூட்டில் நெரிசல் குறையும்
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 44ல் கனரக வாகனங்களுக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. இதற்கு மாற்று போக்குவரத்து சேவையாக ரயில்கள் மாறும். சரக்கு ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்படும். வேலைவாய்ப்பின்றி தவிர்க்கும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்ட இளைஞர்கள் ஓசூர் மற்றும் பெங்களூரு சென்று வேலை செய்வதற்கான சூழல் உருவாகும். குறைந்த கட்டணத்தில் விரைவான ரயில் சேவை மூலம் வேலைக்கு சென்றுவர முடியும்.
