விஜய்யால் சுடப்பட்டவர்களில் நானும் ஒருவன் – இயக்குநர் விக்னேஷ் சிவன்

இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் சிலம்பரசன், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். 2012-ம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.அடுத்தடுத்து சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் 2022-ல் காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். இந்த தம்பதிக்கு உயிர் மற்றும் உலகம் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

தற்போது, நடிகர் பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘எல்ஐகே’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விக்னேஷ் சிவனிடம், ‘போடா போடி’ திரைப்படம் சரியான வரவேற்பைப் பெறாததற்குக் காரணம் என்ன? எனக் கேட்கப்பட்டது. அதற்கு விக்னேஷ் சிவன், “போடா போடி திரைப்படத்தின் இயக்குநராக நான் ஒப்பந்தமானபோது எனக்கு 22 வயது. ஆனால், அப்படம் வெளியாகும்போது 27 ஆகிவிட்டது. அதுவரை ஏதாவது ஒரு தாமதம் நடந்துகொண்டே இருந்தது. இறுதியாக, நடிகர் விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்துடன் ‘போடா போடி’ வெளியானது. அங்கேயே படம் முடிந்துவிட்டது. அந்த மாபெரும் பிளாக்பஸ்டர் முன் போடா போடியால் நிற்க முடியவில்லை. துப்பாக்கி திரைப்படத்தின் இடைவேளையில் நடிகர் விஜய் 12 நபர்களைச் சுட்டுக்கொல்வார். ஆனால், உண்மையில் அவர் சுட்டது 13 பேரை. அன்று அவர் சுட்ட 13-வது ஆள் நான்தான்” என்றார்.

Source link