சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள். கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் எந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன.
30 சதவீத இயந்திரங்கள் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்திரங்களில் பழுது ஏற்பட்டால், பழுது நீக்கபாரத மின்னணு நிறுவன வல்லுநர்களும் தயாராக உள்ளனர். வாக்காளர் பட்டியலின் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்த தகவல் சீட்டுகளை வழங்கும் பணிகள் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு 5நாட்களுக்கு முன்னரே அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். 17-ந் தேதிக்குள் விநியோகம் செய்யும் பணியினை முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு வாக்களிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்று தேர்தல் ஆணையம் தெளிவு படுத்தி உள்ளது.
