ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் சோதனை..!

போதைப் பொருள் வழக்கில் கைதாகி ஜாமீனிலுள்ள ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் மொத்தம் 5 முக்கிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. 

எழும்பூரில் ஜாபர் சாதிக்கிற்குச் சொந்தமான விடுதி, பட்டினப்பாக்கம் உள்ள அவரது வீடு, அண்ணா சாலை மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் அவருக்குத் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத் தேர்தல் நெருங்கி வருவதால், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாகத் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் தமிழகப் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனையில் கைப்பற்றப்படும் ஆவணங்கள் மற்றும் ரொக்கப் பணம் குறித்த விபரங்கள் மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடிக்கு அதிகமான மதிப்புள்ள போதைப்பொருட்கள் கடத்தியதாக ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.

Source link