காரைக்குடி,
காரைக்குடியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிரசாரம் செய்தார் அப்போது அவர் பேசியதாவது:-
டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் நிற்கிறார். ஏற்கனவே இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியடைந்து விட்டார். இனி அடுத்த தேர்தலுக்கு அந்த குக்கர் கட்சியே இருக்காது. பாஜகவுடன் எந்த கட்சி கூட்டணி வைத்தாலும் அந்த கட்சியை பாஜக கடித்து குதறி சாப்பிட்டு விடும்.
தினகரன் எனக்கு நெருங்கிய நண்பர் தான், அவருக்கு இப்போதே சொல்லிக் கொள்கிறேன். அடுத்த தேர்தலில் குக்கர் தாமரையாக மாறிவிடும். பாஜக தமிழகத்தில் வந்துவிட்டால் இந்தியை திணிப்பார்கள். நமக்கு வேண்டாத விஷயங்களை புகுத்துவார்கள். பாஜகவின் நெருங்கிய அலுவலர்களை பதவியில் அமர்த்தி மறைமுகமாக ஆட்சி செய்வார்கள்.
அதிமுக முன்பு இருந்தது போல் இல்லை. கூட்டணி குறித்து ஏதும் பேச வேண்டுமானால் முன்பெல்லாம் டெல்லியில் இருந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள், இல்லை ஜெயலலிதா வீட்டிற்கு வந்து பேசுவார்கள். ஆனால் இப்போது அதிமுக உட்கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் கூட அதுகுறித்து டெல்லியில் வைத்து தான் பேசுகிறார்கள். அதிமுகவிற்கு சுயமரியாதை இல்லை, தன்னிச்சையாக செயல்படவும் தெரியாது. ஆகவே அந்த கட்சியை ஒதுக்கி விட்டு அனைவரும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
