தர்மபுரி சட்டமன்றத் தொகுதி: சௌமியா அன்புமணி vs தேமுதிக- வெற்றியை தீர்மானிக்கும் வன்னியர்கள் வாக்கு! – sowmiya anbumani victory chances in dharmapuri assembly constituency 2026 election

கொங்கு மண்டலத்தில் பெரிதும் கவனம் பெறும் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியில் வன்னியர்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிகவிற்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.

Sowmiya Anbumani Dharmapuri Constituency 2026 Polls(புகைப்படங்கள்Samayam Tamil)
டெல்லி அரசியலில் கவனம் செலுத்தி வரும் அன்புமணி, தனது தந்தை ராமதாஸ் உடனான பிளவால் மாநில அரசியலில் நம்பிக்கைக்குரிய நபரை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார். இந்த சூழலில் மனைவி சௌமியாவை 2026 சட்டமன்றத் தேர்தலில் நிறுத்தி எம்.எல்.ஏ ஆக்கிவிட வேண்டும். அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு எனக் கேட்டு, அமைச்சர் பதவி வாய்ப்பையும் மிஸ் பண்ணிவிடக் கூடாது என காய் நகர்த்த தொடங்கிவிட்டார் அன்புமணி. இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமியிடம் 18 சீட் பெற்ற நிலையில், தர்மபுரி தொகுதியில் சௌமியாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

தர்மபுரியில் சௌமியா அன்புமணியின் செல்வாக்கு

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் சௌமியா போட்டியிட்டார். அப்போது 21,300 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் ஆ.மணியிடம் தோல்வியை தழுவினார். அந்த தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் சௌமியா அன்புமணி முன்னிலை பெற்றார். இங்கு இவர் பெற்ற வாக்குகள் 79,527 ஆகும். மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.வெங்கடேஷ்வரன் 26,860 வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிட்டார்.

விசிக vs பாமக நேருக்கு நேர் போட்டி!

ராமதாஸ் இறக்கிய வேட்பாளர்

இவர் தற்போது அன்புமணி பாமகவில் இருக்கிறார். இதுபோன்ற விஷயங்களை கணக்கில் வைத்து தான் தர்மபுரி சட்டமன்றத் தொகுதியை தேர்வு செய்திருப்பதாக தெரிகிறது. 2026 தேர்தலை பொறுத்தவரை தர்மபுரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் இளங்கோவன் போட்டியிடுகிறார். இதுதவிர நாம் தமிழர் கட்சி சாந்தலட்சுமி, தவெக சிவன், தமிழக வாழ்வுரிமை கட்சி பிரசாந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். மருமகளை தோற்கடிக்க வேண்டும் என்ற திட்டத்தில் சரவணன் என்ற நபரை தனது தரப்பு வேட்பாளராக ராமதாஸ் இறக்கி விட்டிருக்கிறார்.

வெற்றிக்கான வன்னியர்கள் வாக்குகள்

ஆனால் பிரதான போட்டி என்பது பாமக, தேமுதிக இடையில் தான் காணப்படுகிறது. இந்த இருமுனைப் போட்டியில் சௌமியா அன்புமணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில் தர்மபுரி என்றாலே 50 சதவீதத்திற்கும் மேல் வன்னியர்கள் நிறைந்த பகுதி. இதனால் தான் ஒவ்வொரு தேர்தலிலும் பாமகவிற்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்து வருகின்றன. மேலும் கொங்கு மண்டலம் அதிமுகவிற்கு சாதகமான களமாகவும் பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி வசமாக்கும் வாக்கு வங்கி

இதுதவிர பாஜக, அமமுக ஆகிய கட்சிகளும் ஓரளவு வளர்ந்துள்ளன. எனவே இவர்கள் கூட்டணியாக சேரும் போது பலம் அதிகரிக்கும் என்கின்றனர். வன்னியர்களுக்கு அடுத்தபடியாக ஆதிதிராவிடர்கள், முதலியார்கள், நாடார்கள், செட்டியார்கள் உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக வசித்து வருகின்றனர். இதுதவிர சிறுபான்மையினரின் வாக்குகளும் உள்ளன. இந்த வாக்குகளை திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அறுவடைய செய்ய தீவிரமாக களமாடி வருகின்றன.

தவெக வருகையால் மாறப் போகும் களம்

இருப்பினும் கடைசியாக 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல், வன்னியர்கள் வாக்குகள், பிரபலமில்லாத பிற கட்சி வேட்பாளர்கள் போன்றவற்றால் சௌமியா அன்புமணிக்கு வாய்ப்பு சற்று அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். அதேசமயம் தவெக பிரிக்கும் வாக்குகள் புதிய அரசியல் கணக்குகளை எழுதுவதற்கு காத்திருக்கின்றன.