தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ்.. 2020-ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கில் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி இருவரையும் காவல்நிலையம் அழைத்து சென்று இரவு முழுவதும் போலீசார் கொடூரமாக தாக்கியதில் ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்..
இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் – இன்ஸ்பெக்டர்கள் ரகு, கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்..
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது.. சம்பவம் நடந்தது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.. மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்..
கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் சிபிஐ 2427 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு மார்ச் 23 ஆம் தேதி வழங்கப்பட்டது. சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் கடந்த 2-ம் தேதி வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது.. ஆனால் அன்றைய தினம் தீர்ப்பு விவரம் ஒத்திவைக்கப்பட்டது..
இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருக்கும் 9 பேருக்கும் ஏப்ரல் 6, அதாவது இன்று கிழமை தண்டனை விபரங்கள் வெளியிடப்படும் என நீதிமன்றம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது.. அப்போது “ சாத்தான்குளம் வழக்கு அரிதினும் அரிதான வழக்கு.. இந்த வழக்கில் லாக் அப் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என்று மாநில அரசும், குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மத்திய அரசும் பரிந்துரைத்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்..
மேலும் “ காவல்நிலைய மரணம் மிக கொடியது, தந்தையையும், மகனையும் இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.. காவல்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், இதை கொடுமையாகவே கருதப்படுகிறது.. எனவே சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது.. ஆனாலும் மரண தண்டனை தான் வழங்க வேண்டுமா என்பதையும் ஆலோசிக்க வேண்டி உள்ளது..
சட்டத்தை காப்பாற்ற வேண்டிய இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.. சாத்தான்குளம் சம்பவம் சமூகத்தின் வளர்ச்சியை ஒடுக்கும் வகையில் உள்ளது.. அதற்கு ஏற்றார் போல் இந்த தீர்ப்பு இருக்க வேண்டும்.. எதிர்காலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொருளாதார ரீதியிலும் தண்டனை இருக்க வேண்டும்.. எனவே இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது..” என்று நீதிபதி தெரிவித்தார்..
மேலும் குற்றவாளிகளுக்கு அபராத தொகையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.. அதன்படி காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது..
Read More : Flash : 2 தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் மாற்றம்..! விஜய் அதிரடி முடிவு..!
