தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. பல ஹிட் படங்கள் கொடுத்தாலும் சில ஆண்டுகளிலேயே காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் த்ரிஷா கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாகவே நடித்து வருகிறார்.. லியோ, தக் லைஃப், விடாமுயற்சி என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.. மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, தமிழில் சூர்யா உடன் கருப்பு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.. ஆனால் தற்போது 42 வயதாகும் த்ரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்..
திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தாலும் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அவ்வப்போது சில வதந்திகள் பரவி வருகின்றன.. அந்த வகையில் தற்போது த்ரிஷாவுக்கு விரைவில் திருமணமாகப் போகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.. அதன்படி பிரபல தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது.. இரு வீட்டாரின் குடும்பத்தினரும் திருமணத்தை பேசி முடித்துவிட்டதாகவும் விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் செய்திகள் பரவியது.
திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலக த்ரிஷா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.. பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூட த்ரிஷா சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான தகவல் உண்மை தான் எனவும், தயாரிப்பாளர் ஒருவரே தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.. இதனால் த்ரிஷா விரைவில் அரசியலுக்கு வரப்போகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது..
இந்த நிலையில் தனது திருமணம் தொடர்பான வதந்திகளுக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர் “ கேள்விப்பட்டவரை, நான் திரைப்படங்களை விட்டு விலகிவிட்டேனாம்; ஒரு பணக்கார தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு, எனக்கு ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளுக்கு நேற்று தான் 2 வயது ஆனதாம்.. வேறு எதையாவது நான் இதில் சேர்க்க வேண்டுமா? அல்லது இன்றைய ‘கற்பனைக் கதைக்கான ஒதுக்கீடு’ (Fiction Quota) இத்துடன் நிறைவடைந்துவிட்டதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்..
இதன் மூலம் சினிமாவில் இருந்து விலகுவதாக வெளியான வதந்திகளுக்கு த்ரிஷா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்..
