தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதனால் அரசியல் களம் அனல் பறக்கிறது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என அரசியல் கட்சி தலைவர்கள் போட்டி போட்டு சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் வேட்புமனு நிறைவு பெற்றுள்ளது.
இதனிடையே அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அ. நல்லதம்பி யை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடையே மக்களிடையே உரையாற்றினார். அப்போது எதிர்பாராத பரபரப்பு ஏற்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவாளர் பாமக கொடியை உயர்த்தி பிடித்தவாறு நின்றுள்ளார். வாகனத்தில் நின்ற பழனிச்சாமி, தம்பி கொடியை கீழே இறக்குப்பா.. போட்டோ எடுக்குறாங்களா.. கொஞ்சம் இறக்குப்பா என்றார்.
ஆனால் அந்த தொண்டர் கொடியை இறக்காமல் உயர்த்தி பிடித்தவாறு நின்றதால் டென்ஷன் ஆன எடப்பாடி பழனிச்சாமி தம்பி சொன்னா கேளு என ஆக்ரோஷமாக கத்தினார். கூட்டணி கட்சியில் உள்ள கொடியை கீழே இறக்குமாறு இபிஎஸ் கூறியது பாமக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
