எடப்பாடி சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளர் அருண் குமாரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வீட்டிற்கு சென்று ஆவணங்களை எடுத்துக் கொண்டு வருவதாக கூறிவிட்டு, திரும்பி வராததால் மனு நிராகரிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதி முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் விஐபி தொகுதியான எடப்பாடியில், தவெக வேட்பாளராக களம் இறங்கியுள்ள எம்.அருண்குமார் திடீரென காணவில்லை என்ற தகவல் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், அவரை எதிர்த்து தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளராக அருண்குமாரை நிறுத்தி உள்ளார். இன்று ஏப்ரல் 7ஆம் தேதி, வேட்புமனு பரிசீலனைக்காக அருண்குமார் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வராதது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால், அவர் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது மிரட்டப்பட்டிருக்கலாம் என தவெக தொண்டர்கள் குற்றம் சாட்டினர்.

போலீசாருடன் வாக்குவாதம் எடப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தின் முன்பு திரண்ட தவெக தொண்டர்கள் மற்றும் அருண்குமாரின் ஆதரவாளர்கள், காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் வேட்பாளர் எங்கே? அவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமை என்று கோஷமிட்டனர்.

இந்த பதட்டம் காரணமாக அந்தப் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தவெக தலைமை இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
