ஜோசப் விஜய் முதல் காமராஜ் வரை… பிராக்சி வேட்பாளர்களால் வெற்றிக்கு சிக்கலா? 2026 தேர்தலில் பலாப்பழம் பிளாஷ்பேக்! – proxy candidates from perambur to mannargudi kamaraj in 2026 tamil nadu assembly election

வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைகள் நேற்றைய தினம் முடிவடைந்துள்ளன. இந்த சூழலில் ஒரே தொகுதியில் ஒரே பெயரில் பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிடும் சூழலை பார்க்க முடிகிறது.

TVK Vijay Proxy Name in Perambur Constituency(புகைப்படங்கள்Samayam Tamil)
2024 மக்களவைத் தேர்தலின் போது ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். இவருக்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு இருந்தது. ஆனால் இவரை தோற்கடிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிட்டனர். இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு வாக்குகள் பிரியும் என்று அரசியல் கணக்கு.

ஒரே பெயரில் 5 ஓபிஎஸ் வேட்பாளர்கள்

இருப்பினும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய பலாப்பழம் சின்னத்தை பலரும் சரியாக அடையாளம் கண்டு கொண்டு வாக்களித்தனர். இவருக்கு 3,42,882 வாக்குகள் கிடைத்தது. இது பதிவான வாக்குகளில் 30.89 சதவீதம் ஆகும். ஆனால் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 5.09 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2026 தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் குழப்பம்

இதேபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் சில நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. சில சுயேட்சை வேட்பாளர்கள் சுய விருப்பத்தின் பேரில் யதேட்சையாக கூட வேட்புமனு தாக்கல் செய்திருக்கலாம். இருந்தாலும் பின்னணியில் அரசியல் கணக்குகள் இருப்பதை யாராலும் மறுக்க இயலாது.

பாவம் விஜய்? சிக்க வைக்கும் சிலர்? யார் அது?

வ.எண் தொகுதி ஒரே பெயரில் வேட்பாளர்கள் ஸ்டார் வேட்பாளர்
1 பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி ஜோசப் என்ற பெயரில் 2 பேரும், விஜய் என்ற பெயரில் 3 பேரும் போட்டியிடுகின்றனர். ஆனால் ஜோசப் விஜய் என்ற பெயரில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தான் ஸ்டார் வேட்பாளர்.
2 கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி செந்தில் குமார் என்ற பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் வி.செந்தில் குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகிறார். மற்றவர்கள் சுயேட்சையாக களமிறங்குகின்றனர். இந்த தொகுதியில் ஸ்டார் வேட்பாளராக திமுகவின் செந்தில் பாலாஜி களம் காண்கிறார்.
3 தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி கார்த்திகேயன் பெயரில் 3 பேர் போட்டியிடுகின்றனர். இதில் என்.ஆர்.கார்த்திகேயன் என்பவர் தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர். இங்கு ஸ்டார் வேட்பாளர் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. தொடர்ந்து 3 முறை எம்.எல்.ஏவாக இதே தொகுதியில் வென்றிருக்கிறார்.
4 துறையூர் சட்டமன்றத் தொகுதி சரோஜா என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். இதில் இ.சரோஜா என்பவர் தான் அதிமுக வேட்பாளர். மற்றவர்கள் சுயேட்சைகள். இங்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் லெனின் பிரசாத் களம் காண்கிறார்.
5 மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி காமராஜ் என்ற பெயரில் 4 பேர் போட்டியிடுகின்றனர். ஆனால் எஸ்.காமராஜ் தான் அமமுக சார்பில் போட்டியிடும் பிரதான வேட்பாளர். இங்கு திமுகவின் டி.ஆர்.பி.ராஜா ஸ்டார் வேட்பாளர். தொடர்ந்து 3 முறை இதே தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில், 4வது முறை போட்டியிடுகிறார்.

ஒரே பெயரில் வேட்புமனு – என்ன தாக்கம் ஏற்படும்?

இதேபோல் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஒரே பெயரில் வேட்புமனு தாக்கல் செய்து போட்டிக்கு தயாராகியுள்ளனர். இதனால் என்ன நடந்துவிடும்? சரியான வேட்பாளர்களை வாக்காளர்கள் அடையாளம் கண்டு கொண்டு வெற்றியை தேடித் தந்து விடுவார்களே எனக் கேட்கலாம். இதில் முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. போட்டி கடுமையாகும் போது வெற்றி வாய்ப்பு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பறிபோகக் கூடும். உதாரணமாக 2021 சட்டமன்றத் தேர்தலில் 137 வாக்குகள் வித்தியாசத்தில் தி.நகர் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றார்.

தவெக வருகை – கடுமையாக தேர்தல் போட்டி

இதையடுத்து மொடக்குறிச்சி தொகுதியில் பாஜகவின் சி.சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவ்வாறு 8 தொகுதிகளில் 1,000க்கும் குறைவான வாக்குகள் வெற்றியை தீர்மானித்துள்ளன. 24 தொகுதிகளில் 3,000க்கும் குறைவான வாக்குகளால் வெற்றி கைமாறி சென்றிருக்கிறது. அதிலும் 2026 சட்டமன்றத் தேர்தல் என்பது பிரதான திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை தாண்டி நடிகர் விஜய்யின் தவெக முதல்முறை களமிறங்கியுள்ளது. ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி தேர்தலை சந்திக்கின்றனர்.
இதற்கிடையில் 10 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் இருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சி இளைஞர்களின் வாக்குகளை கவர காத்திருக்கிறது. இத்தகைய போட்டியில் ஒவ்வொரு வாக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் நிற்கும் போது, அவர்களுக்கு சில நூறு அல்லது சில ஆயிரங்களில் வாக்குகள் சிதறும். இது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் மிகவும் கவனத்துடன் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டியுள்ளது.

வாக்காளர்கள் எப்படி சரியாக வாக்களிப்பது?

தங்கள் வேட்பாளரை சரியாக அடையாளம் கண்டு கொண்டு வாக்குச்சாவடிக்குள் நுழையும் வாக்காளர்கள், முதலில் வரிசை எண்ணை பார்க்க வேண்டும். இதுபற்றி கட்சிகள் ஏற்கனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும். அதன்பிறகு சின்னத்தை பார்த்து வாக்கை செலுத்த வேண்டும். முன்னதாக வாக்குச்சாவடி வாசலில் வரிசை எண், பெயர், வேட்பாளர் புகைப்படம், கட்சி சின்னம் ஆகிய விவரங்களை ஒட்டியிருப்பர். அதை பார்த்துவிட்டு வாக்களிக்க செல்வது நல்லது.