கவுகாத்தி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று இரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸும், மும்பை இந்தியன்சும் மோதின. பலத்த மழையால் ஆட்டம் தொடங்க தாமதம் ஆனது. இதையடுத்து 11 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. இந்த போட்டியில் மும்பை அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
முன்னதாக இந்தப் போட்டியில், 15 வயதே ஆன இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி பும்ரா ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்க விட்டார். முன்னணி பந்து வீச்சாளரான பும்ரா பந்தை சூர்யவன்ஷி எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில், பும்ராவின் முதல் பந்தையே லாங் ஆன் பகுதியில் சிக்சருக்கு தூக்கினார். சூர்யவன்ஷி சிக்சர் அடித்ததை எதிர்பார்க்காத பும்ரா, மெல்லிய புன்னகையுடன் சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த காட்சியை வைத்து மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர். இந்த போட்டியில் சூர்யவன்ஷி 39 ரன்களில் (14 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) ஷர்துல் தாக்கூர் வீசிய பந்தை தூக்கி அடித்து எல்லைக்கோடு அருகே கேட்ச் ஆனார்.
