அமெரிக்கா -ஈரான் போர் நிறுத்த அறிவிப்பை அடுத்து இந்திய பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்ந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 765 புள்ளிகள் உயர்ந்து 23,894 புள்ளிகளில் வர்த்தமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,510 உயர்ந்து 77,200 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
அமெரிக்கா – ஈரான் போர் நிறுத்த அறிவிப்பால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 17% வரை சரிவடைந்தது. ஹார்மூஸ் நீரிணை வழியே அனைத்து நாட்டின் கப்பல்களும் பயணிக்க அனுமதிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிந்து பீப்பாய் ஒன்று 95 டாலருக்கு விலை குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பிப்ரவரி 28-ம் தேதி நேரடிப் போர் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஈரான் அரசு ஹார்மூஸ் நீரிணை மூடி கப்பல் போக்குவரத்துக்கு தடை விதித்தது. ஹோர்முஸ் நீரிணை மூடலால் உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியிருந்தது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் எரிவாயு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நிலவியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மார்ச் மாதத்தில் 50% வரை உயர்ந்திருந்தது.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே, ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான நிபந்தனையுடன் கூடிய, இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று(08-04-2026) கையெழுத்தானது. போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக குறைந்து 95 டாலருக்கு விற்பனையாகிறது.

