தமிழ் சினிமாவில் வில்லனாகவும், நடிகராகவும் இருக்கும் மீசை ராஜேந்திரன் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தீவிரமான விசுவாசி. அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்ததும் அதிலும் தன்னை இணைத்து கொண்டார். விஜயகாந்த் மறைவிற்கு பின்னும் கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வந்த மீசை ராஜேந்திரன், தற்போது தேமுதிக கட்சியில் இருந்து விலகுவதாக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் 31 ஆண்டுகளாக கேப்டன் மன்றத்தில் பணியாற்றி இருக்கிறேன். 21 ஆண்டுகளாக கட்சிக்காகவும் உழைத்து இருக்கிறேன். கட்சியில் தொடர்ந்து பணியாற்ற முடியாத காரணத்தால், தன்னை கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளது தேமுதிக கட்சிக்குள் சலசலப்பை கிளப்பியுள்ளது.
மீசை ராஜேந்திரன் தேமுதிக சார்பில் மூன்று முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியுள்ளார். இந்நிலையில் இந்த முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் தேமுதிகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். இதனிடையில் தேமுதிகவில் இருந்து விலகுவது சம்பந்தமாக மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது, விஜயகாந்திடம் விஸ்வாசமாக இருந்தேன். அவர் மன்றத்தில் 31 ஆண்டுகளாகவும், கட்சியில் 21 ஆண்டுகளாகவும் இருந்துள்ளேன்.
ஆனால் என்னுடைய விஸ்வாசத்துக்கு தகுத்த மதிப்பும், மரியாதையும் கிடைக்கவில்லை எனவே கட்சியில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் மீசை ராஜேந்திரன். அதோ வேறு கட்சியில் இருப்பதை பற்றி தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. மற்ற கட்சிகளில் இருந்து அழைப்பு வந்தால் ஆலோசனை செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் தீவிர விசுவாசியான மீசை ராஜேந்திரன் கட்சியில் இருந்து விலகியுள்ளது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேமுதிக கட்சி துவங்கியதில் இருந்து முதன்முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. தேமுதிகவுக்கு பத்து சட்டமன்ற தொகுதிகளும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதில் எல்.கே. சுதீஷ் எம்பியாகியுள்ள நிலையில், பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். அதேபோல் அவருடைய மகன் விஜயபிரபாகரனும் இந்த தேர்தலில் களமிறங்குகிறார். அதே நேரம் மீசை ராஜேந்திரனுக்கு இந்த தடவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இதனிடையில் பிரேமலதா விஜயகாந்த் சட்டப்பேரவை தேர்தலுக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், இத்தனை ஆண்டு காலமாக திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாததை நினைத்து பீல் பண்ணுவதாக நேற்றைய தினம் பேசியிருந்தார். அதோடு தவறான கூட்டணி இருந்து விட்டோம் என்று அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது குறித்தும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
