தவெக விஜய் பரப்புரை
இந்நிலையில் இன்றைய நெல்லை பரப்புரையில் பேசிய தவெக விஜய், உண்மையான காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் தான் இருக்கிறது என்றார். திமுக, காங்கிரஸ் இடையில் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரச்சாரமும் துவங்கப்பட்டு விட்டது. இப்படியான நிலையில் உண்மையான காங்கிரஸ் நம்ம பக்கம் இருப்பதாக விஜய் பேசியுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
தமிழக காங்கிரஸ் கண்டனம்
அதில், தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்காக பரப்புரை நரைபெர்று வரும் நிலையில் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என கூறப்பட்டுள்ளது. தவறான உள்நோக்கத்துடன் திரித்து கூறப்பட்டுள்ள இதனை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் அல்லது அதிகாரத்துக்கு கட்டுபடக்கூடிய கட்சி கிடையாது காங்கிரஸ். எங்களுடன் கூட்டணி வைப்பதற்கு தவெக எந்தளவுக்கு திரைமறைவு முயற்சிகளை மேற்கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும் என கடுமையான விமர்சனம் வைத்துள்ளது.
கரூர் சம்பவத்துக்கு பின் துணிவற்ற நிலை
அதோடு நடிகர் விஜய்க்கு கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத நிலையில், துவக்கத்திலே அந்த முயற்சிகள் நிராகடிக்கப்பட்டு விட்டது. கரூர் சம்பவத்துக்கு பின்பாக பாஜகவை எதிர்த்து எந்த கருத்தையும் கூற துணிவற்ற நிலையில் விஜய் உள்ளார். கொள்கை கூட்டணியாக 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லையென திட்டவட்டமாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆள்பிடிக்கக் கூடிய முயற்சி
மேலும் காங்கிரஸில் ஆள்பிடிக்கக் கூடிய தவெகவின் முயற்சியில் சிலர் தான் சிக்கினார்கள். உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் இருப்பதாக கூறுவது அப்பட்டமான பொய். அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆதாரமற்ற, விஷமத்தனமான குற்றச்சாட்டு. தவெக விஜய், காங்கிரஸை சீண்டிப் பார்க்கக்கூடிய வேலையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்
அதோடு உண்மையான காங்கிரஸ் வேறு எங்கோ உள்ளது என்று விஜய் பேசுவது அரசியல் நாகரீகத்துக்கு எதிரானது. இதனால் காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளும் புண்படும். எனவே விஜய் தனது கருத்துக்களை உடனடியாக திருப்பப் பெற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்களிடமும், காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களிடமும் விஜய் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சியை சார்ந்த சிலர் விருப்பம் தெரிவித்து வந்ததால், திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ப. சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலையீட்டு திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணியை உறுதி செய்தனர். தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் தவெக பக்கமே உண்மையான காங்கிரஸ் இருப்பதாக விஜய் பேசியுள்ளது எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
