வாஷிங்டன் டி.சி.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி வான்வழியே கடுமையாக தாக்குதல் நடத்திய பின்னர் மேற்காசியாவில் பதற்ற நிலை அதிகரித்தது. இந்த சூழலில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வார காலத்திற்கு போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
ஈரானுக்கு எதிராக 2 வார காலம் தாக்குதல்களை நிறுத்துவது என்ற டிரம்ப் அரசின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்து உள்ளது. டிரம்ப்பின் போர்நிறுத்த ஒப்பந்த அறிவிப்பை நெதன்யாகு அலுவலகம் வரவேற்றுள்ளது. ஆனால், இந்த 2 வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தில், லெபனான் நாடு இடம் பெறாது என்றும் கூறி உள்ளது.
இதனால், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஹிஸ்புல்லா சேர்க்கப்படவில்லை என அவர் கூறினார். போர்நிறுத்த ஒப்பந்தம் பற்றிய அறிவிப்பு வெளியானாலும், லெபனானுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், ஆம். அவர்கள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்றார்.
இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானை ஏன் சேர்க்கவில்லை என்று கேட்டதற்கு, ஏனெனில் ஹிஸ்புல்லா என டிரம்ப் கூறினார். அதனால், லெபனானை இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்கினால் அதற்கு சம்மதம் தெரிவிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ஒப்பந்தத்தில் அது ஒரு பகுதியாகும். எல்லோருக்கும் அது தெரியும். அது தனியான சிறு சண்டை என்று கூறினார்.
