பொதுச்செயலாளரான பின் எடப்பாடிக்கு வெற்றியே இல்லை

விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் அரசியலுக்கு வருவதற்கு முன்பே மிசாவில் கைதானவன் நான் என்றும், தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிசாமி தரம் கெட்டு பேசுகிறார் என்றும் குற்றம் சாட்டினார். அதிமுக பொதுச் செயலாளரான பின் இபிஎஸ், வெற்றி பெற்றதே இல்லை என்றும் திமுக தலைவரானபின் நான் தோற்றதே இல்லை என கூறிய அவர், 10 தோல்வி பழனிசாமிக்கு 11ஆவது தோல்வியை மக்கள் அளிக்க வேண்டும் எனவும் விமர்சித்தார்.

விழுப்புரத்தில் மு.க.ஸ்டாலின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில், விழுப்புரம் – டாக்டர் லட்சுமணன்திருக்கோவிலூர் – பொன்.கௌதம சிகாமணிசெஞ்சி – செஞ்சி மஸ்தான்விக்கிரவாண்டி – அன்னியூர் சிவாவானூர் – கௌதம் திராவிட மணிமயிலம் – தேமுதிக வெங்கடேசன்திண்டிவனம் – விசிக வன்னி அரசு ஆகியோரை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ராமதாஸ் குறித்து நெகிழ்ச்சி ராமதாஸ்க்கு இன்றைக்கு பலர் நம்பிக்கை துரோகம் செய்திருக்கலாம். ஆனால், தலைவர் கலைஞரும், நானும், திமுகவும், அவரை என்றைக்கும் சமூகநீதி போராளியாகத் தான் பார்க்கிறோம், மதிக்கிறோம். இன்று என்டிஏ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி என்பதே, துரோகிகளால் தமிழ்நாட்டிற்கு புதிய துரோகங்கள் செய்ய அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணி.

கொரோனா காலத்தில்…தோல்வி பயத்தில், தினம் தினம் தராதரம் இல்லாமல், இபிஎஸ் தரங்கெட்டு பேசுகிறார். சென்னையில் என்னைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? திமுக ஆட்சியில் கொரோனா வந்திருந்தால், இவரே போயிருப்பார் என்று என்னை பேசியிருக்கிறார். பழனிசாமி அவர்களே… என் மரணத்தை பற்றி பேசுகிறீர்களே… மரணத்தைப் பார்த்து கலங்கக் கூடியவனோ, பயப்படுகிறவனோ நான் அல்ல. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1976ல் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பே, 23 வயதில் மிசாவில் கைது செய்யப்பட்டு, சிறைக் கொடுமைக்கு ஆளானவன். ஓராண்டு காலம் நெஞ்சுரத்தோடு சிறையில் இருந்தவன் நான். கொடுஞ்சிறையின் கொடுமைக்கே பயப்படாதவன் நான், இந்தக் கொரோனாவுக்கா பயப்படப் போகிறேன். கொரோனா மேல் அனைவரும் பெரும் அச்சத்தில் இருந்தபோதே, அதற்கான உடை அணிந்து கொண்டு கொரோனா வார்டுக்குள் சென்றவன் தான் இந்த ஸ்டாலின்.

இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை பழனிசாமியின் கீழ்த்தரமான பேச்சைக் கேட்ட பிறகு, என்னுடைய வருத்தம் எல்லாம் என்ன தெரியுமா? தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இனமானப் பேராசிரியர் என்று எத்தனையோ பண்பாடுமிக்க பெருந்தலைவர்களிடம் நேரில் பழகக்கூடிய நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட நான், இன்று இவருக்கெல்லாம் பதில் சொல்லும் நிலை இருக்கிறதே என்று உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.

தோற்றதே இல்லை அ.தி.மு.க. பொதுச் செயலாளரான பின்பு, இபிஎஸ் வென்றதே இல்லை.தி.மு.க. தலைவரான பின் உங்கள் ஆதரவால் நான் தோற்றதே இல்லை. பாஜக எனும் பேரழிவை தமிழ்நாட்டிற்குள் கொண்டுவர நினைக்கும் அடிமை பழனிசாமிக்கு, தமிழ்நாட்டு மக்கள் கடுமையான தண்டனையை இந்த தேர்தலில் கொடுக்க வேண்டும்.

உண்மையில், நடக்கும் தேர்தல் என்பது, டெல்லிக்கும் – தமிழ்நாட்டுக்கும் நடக்கும் தேர்தல். தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பத்து தோல்வி பழனிசாமிக்கு, பதினோராவது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

Source link