நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் ஹெராயின், மெத்தாம்பெட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்டன. அதேபோல தற்போது இலங்கையில் ரூ. 200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
முக்கிய அம்சங்கள்:
- இலங்கையில் ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல்
- 8.865 தங்கக் கட்டிகள் பறிமுதல்
- இலங்கை கடற்படை நடவடிக்கை
போதைப்பொருட்கள் கண்டுபிடிப்பு
இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்திற்கிடமாக ஒரு மீன்பிடி படகு செல்வது கவனத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து அந்த படகை சுற்றி வளைத்து கடற்படையினர் சோதனை நடத்தினர். சோதனையின் போது அந்த படகில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டிருந்த போதைப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.200 கோடி ஹெராயின்
அந்த படகில் சுமார் 102 கிலோ ஹெராயின் மற்றும் ஒரு கிலோ கொக்கைன் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த போதைப்பொருட்கள் பல பொட்டலங்களாக கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
6 பேர் கைது
இதனைத் தொடர்ந்து இந்த கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஆறு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் பயன்படுத்திய மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன மற்றும் எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து பறிமுதல்
இதற்கிடையில் நேற்று ராமநாதபுரத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று இலங்கையின் கடற்பகுதியில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் மற்றும் கொக்கைன் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கக் கட்டிகள் கடத்தல்
இதற்கிடையில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யாழ்ப்பாணம் அருகிலுள்ள மாதகல் கடல் வழியாக இந்தியாவுக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்பட உள்ளதாக இலங்கை கடற்படைக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
8.865 கிலோ தங்கம் பறிமுதல்
இந்த தகவலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர், அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து 8 கிலோ 865 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த தங்கத்தை இந்தியாவுக்கு கடத்த முயன்றதாக கூறப்படும் நபரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவரிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விசாரணைக்காக அந்த நபர் இலங்கையின் இளவாலை காவல் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Gold | ஒரு வருடத்தில் 5000 கிலோ Gold..America நிறுவனம் ஆய்வுஅதிரடி !
இந்தியா – இலங்கை கடற்பகுதிகளில் தொடர்ந்து போதைப்பொருள் மற்றும் தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவது பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்க கடற்படையினரும் பாதுகாப்பு அமைப்புகளும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
