சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரத்தின் போது பால்டாயில் குறித்து பேசுமாறு அதிமுக தொண்டர்கள் கூச்சலிட்டனர். பால்டாயில் குறித்து பேச வேண்டாம், உதயநிதி ஸ்டாலின் நன்றாக வாழ வேண்டும் என்று இபிஎஸ் கூறினார்.
ஆயிரம் விளக்கில் இபிஎஸ் பிரச்சாரம் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;இந்த தேர்தல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். வாரிசு அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். சீர்காழியில் இபிஎஸ்ஸை துடைத்து எறிய வேண்டும் என்று பேசி இருக்கிறார். அதிமுக என்பது 2 கோடி தொண்டர்கள் நிறைந்த கட்சி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவை உடைக்கலாம், முடக்கலாம் என்று நினைத்து ஒரு ’பி’ டீமை உருவாக்கி நீங்கள் சதித் திட்டம் தீட்டினீர்கள். அத்தனையையும் நாங்கள் முறியடித்தோம்.

எத்தனை வழக்குகள்? இப்போது பி டீம் எங்கு போனார்கள்? குப்பைக்கு போய் விட்டார்கள். அதுதான் சரியான வார்த்தை. அவருக்கு என்ன அடையாளம் கொடுத்தோம், எவ்வளவு பொறுப்பை ஜெயலலிதா கொடுத்தார். அதை எல்லாம் மறந்து சுயநலவாதியாகி விட்டார். அப்படிப்பட்ட துரோகிகள் எல்லாம் அதிமுகவில் இருந்து துடைத்து எறியப்பட்டார்கள். இப்போது அதிமுக புனிதமாக இருக்கிறது.

கூட்டணி பேச்சு வார்த்தை காங்கிரஸ், திமுக 20 நாட்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள். இவர்களை மாற்றி அவர்களும், அவர்களை மாற்றி இவர்களும் குறை கூறிக் கொண்டிருந்தார்கள். அதிமுக அப்படியா இருந்தது? திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்தது என்று ஸ்டாலின் பேசுகிறார். யார் முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது? அப்படியென்றால் யார் காப்பி அடித்திருப்பார்கள்? நாம் தேர்தல் அறிக்கை வெளியிட்டு 10 நாட்களுக்குப் பிறகு தான் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. நமது தேர்தல் அறிக்கையை திமுக தான் காப்பி அடித்தது. அதை அப்படியே உருட்டிப் பேசுகிறார் ஸ்டாலின்.

நீட் தேர்வு ரத்து என்றார்களே?நீட் தேர்வு ரத்து என்றார்களே, செய்தார்களா? தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினார்களா? மாதம்தோறும் கேஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் கொடுத்தார்களா? பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்றார்கள், குறைத்தார்களா? கல்விக்கடன் மாணவர்களுக்கு ரத்து செய்தார்களா? ஒன்றும் செய்யவில்லை. மக்களை ஏமாற்றி புதிதாக ஒரு அறிவிப்பு. கூப்பன் கொடுப்பார்களாம், கூப்பன் யார் கொடுப்பார்கள்? திமுக ஆட்சிக்கு வருவது 100 சதவீதம் முடியாது. ஆனால், அந்த அறிவிப்பில் கூட திமுக குடும்பத்திற்கு என்ன வருமானம் என பார்த்து தான் அறிவிப்பு கொடுத்திருக்கிறார். கூப்பன் கொடுத்தால் தானே கமிஷன் கிடைக்கும். நேரடியாக வங்கிக்கு அனுப்பினால் கிடைக்குமா?இவ்வாறு பேசி எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
