2001 மேஜிக் மீண்டும் நடக்குமா? 80ஸ் டூ 2K- எகிறும் பாஜக வாக்கு வங்கி கிராப்… திராவிட கோட்டையில் மலரும் தாமரை! – tamil nadu bjp vote share journey from 1980 to 2021 in assembly elections

தமிழக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும் என்ற கணக்கில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இம்முறை கூடுதல் சீட் கேட்டு பெற்றுள்ள நிலையில், வாக்கு வங்கி மற்றும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை உயர்த்த காய் நகர்த்தி கொண்டிருக்கின்றனர்.

நிராகரிக்கப்படும் Annamalai ? EPS காரணமா?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாஜக ஒரு கை பார்த்துவிட்டது. ஆனால் அதற்கு பிடிபடாத தென்னிந்திய மாநிலங்களில் காலூன்ற தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக திராவிட பாரம்பரியம் கொண்ட தமிழ்நாட்டில் பாஜகவின் வியூகங்கள் பெரிதாக எடுபடவில்லை. தேர்தல் அரசியலிலும் சரி, சித்தாந்த நிலைப்பாட்டிலும் சரி. எவ்வளவு தான் ஆவேச குரல் எழுப்பினாலும் பெரியார், சமூக நீதி, மொழி உரிமை, மாநில சுயாட்சி ஆகிய விஷயங்களை மீண்டும் மீண்டும் உரக்க சொல்லி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளாக திமுக, அதிமுகவை தாண்டி அரசியல் செய்ய முடியவில்லை.

பாஜக எதிர்ப்பில் திமுக தீவிரம்

இருப்பினும் மாநில கட்சிகள் உடன் கூட்டணி அமைத்து தங்கள் செல்வாக்கை வலுப்படுத்த முயற்சிக்கின்றனர். அந்த வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 இடங்களை பெற்று, பிரச்சார களத்தில் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் பாஜக ஒரு வட இந்திய கட்சி. சமூக நீதிக்கு எதிரானவர்கள். இந்துத்துவாவை பரப்பி மத மோதலை ஏற்படுத்தி தமிழக அமைதிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடுவர். நமது மாநில நலன் சார்ந்த செயல்பாடுகளுக்கு போதிய ஒத்துழைப்போ, நிதி உதவியோ அளிப்பதில்லை என்று அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக தொடர்ச்சியாக விதைத்து வருகிறது.

நிராகரிக்கப்படும் Annamalai ? EPS காரணமா?

ஒருவகையில் திமுகவின் கூர்மையான தேர்தல் ஆயுதமாகவும் பாஜக எதிர்ப்பு தான் காணப்படுகிறது. 1980ஆம் ஆண்டு தான் முதல்முறை பாஜக தேர்தல் அரசியலில் இறங்கியது. அப்போது தமிழகத்தில் 10 இடங்களில் போட்டியிட்டு 0.07 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர். தொடக்கத்தில் பாஜகவின் செல்வாக்கு என்பது குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 1982ல் நடந்த மண்டைக்காடு கலவரம் இந்துத்துவா அரசியல் நுழைவதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

பாஜகவிற்கு திருப்புமுனை தேர்தல்

1984ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் இந்து முன்னணி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வி.பாலச்சந்திரன் 28,465 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதே தேர்தலில் குளச்சல் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.காந்தி 32,996 வாக்குகள் பெற்றார். ஆனால் வெறும் 589 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பாஜகவின் மற்ற வேட்பாளர்கள் சில நூறு வாக்குகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில், எம்.ஆர்.காந்திக்கு வெற்றிக்கு நெருக்கமான வாக்குகள் கிடைத்தது ஆச்சரியமூட்டியது.

இவை அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துத்துவா சக்திகள் வேரூன்ற மேலும் வலு சேர்த்தன. அதன்பிறகு பத்மநாபபுரம், குளச்சல் உள்ளிட்ட தொகுதிகளில் அடுத்தடுத்த தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாக களம் காண ஆரம்பித்தது. கன்னியாகுமரியை சேர்ந்த சி.வேலாயுதன் என்ற நபர் பாஜக சார்பில் தொடர்ந்து தேர்தலில் களம் கண்டார். இவரது விடாமுயற்சிக்கு பலனாக 1996ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் முதல்முறை எம்.எல்.ஏவாக வென்றார்.

தமிழகத்தில் முதல் எம்.எல்.ஏ வேலாயுதன்

இதுவே தமிழகத்தில் பாஜகவிற்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிராக காங்கிரஸை உடைத்து கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. இது கூட்டணியில் இணைந்து பெரிய அளவில் ஆதரவு அலை வீசியது. இத்தகைய சூழலிலும் தனது உள்ளூர் செல்வாக்கு மூலம் பாஜக தனது காலடியை பதித்தது. 2001ஆம் ஆண்டு திமுக உடன் பாஜக கூட்டணி வைத்து பெரும் திருப்புமுனை தேர்தலாக அமைந்தது. அதில் 4 பேர் வெற்றி பெற்றனர்.

2001 தேர்தல் முடிவுகள்
வ.எண் தொகுதி பாஜக எம்.எல்.ஏ
1 காரைக்குடி ஹெச்.ராஜா
2 மயிலாடுதுறை ஜெகவீரபாண்டியன்
3 தளி கே.வி.முரளிதரன்
4 மயிலாப்பூர் கே.என்.லட்சுமணன்

இந்த தேர்தலில் தான் 3.19 சதவீத வாக்குகளை பாஜக பெற்றது. இதுவே தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். அதன்பிறகு அதிகப்படியான இடங்களில் போட்டியிட்டு பார்த்தது. ஆனால் 2 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. 2021 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து மீண்டும் 4 எம்.எல்.ஏக்களை பாஜக பெற்றது கவனிக்கத்தக்கது. இதில் 2.62 சதவீத வாக்குகளை பெற்றிருந்தனர்.

2021 தேர்தல் முடிவுகள்
வ.எண் தொகுதி பாஜக எம்.எல்.ஏ
1 நாகர்கோவில் எம்.ஆர்.காந்தி
2 கோவை தெற்கு வானதி சீனிவாசன்
3 மொடக்குறிச்சி சி.சரஸ்வதி
4 திருநெல்வேலி நயினார் நாகேந்திரன்

2024 மக்களவைத் தேர்தலில் பாஜக தங்கள் தலைமையில் மூன்றாவது அணியை அமைத்திருந்தனர். இதில் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலையின் உழைப்பு முக்கியத்துவம் பெற்றது. இதன் விளைவாக 11.24 சதவீத வாக்குகளை பெற்றனர். ஆனால் சீட் எதுவும் வெற்றி பெறவில்லை. இதே உற்சாகத்துடன் மீண்டும் அதிமுக கூட்டணியில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. இம்முறை 27 இடங்களை பெற்ற நிலையில் போட்டி கடுமையாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.