தப்பித்தவறி அதிமுக ஜெயித்தால்.. இவர்தான் முதலமைச்சர்.. இபிஎஸ் இருக்க மாட்டார்.. திருமாவளவன் – vck thirumavalavan mp comments on edappadi palaniswami and nda alliance

சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரைகள் முழு வீச்சீல் நடந்து வரும் நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதை, திமுகவினரும் கூட்டணி கட்சியினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக அமித்ஷாவின் அடிமையாக எடப்பாடி பழனிசாமி மாறி விட்டதாக திமுக தலைவர்கள் தங்களது பரப்புரைகளில் விமர்சித்து கொண்டிருக்கின்றனர். இதற்கு இபிஎஸ் தரப்பில் இருந்தும் உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.

விசிக தலைவர் திருமாவளவன்
இதன் காரணமாக அரசியல் களம் பெரும் பரப்பாகியுள்ளது. இதனிடையில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி சமீபத்தில் தனது பரப்புரையை துவங்கினார். விடுதலை சிறுத்தைகள் மற்றும் கூட்டணி கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஒருவேளை இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்க மாட்டார் என திருமாவளவன் பேசியுள்ளார்.

காரைக்குடி எச். ராஜா
இது சம்பந்தமாக பரப்புரையில் அவர் கூறியுள்ளதாவது, “ஒருவேளை அதிமுக இந்த தேர்தலில் தப்பித்தவறி வெற்றி பெற்றால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக காரைக்குடி ராஜா தான் இருப்பார். எடப்பாடி பழனிசாமி இருக்க மாட்டார். எச். ராஜா பற்றி உங்களுக்கு தெரியும்ல. அவர் கோர்ட்டாவது என்று எல்லாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடியவர். அவ்வளவு மோசமான சக்தி. திருப்பரங்குன்றத்தில் பிரச்சனையை ஏற்படுத்திய சக்தி. மக்களுக்கு இடையில் மதத்தின் பெயரால் பகையை உருவாக்கக்கூடிய சக்தி.

முதல்வர் எடுக்கும் முயற்சிக்கு ஆதரவு
அந்த சக்தி தமிழ்நாட்டில் வந்து விடக்கூடாது என்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுக்கும் முயற்சிக்கு விடுதலை சிறுத்தைகள் உற்றத்துணையாக இருக்கிறோம்”. இவ்வாறு திருமாவளவன் பேசியுள்ளார். முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் யார் என்ற கேள்விகளை திமுகவினர் முன்வைத்தனர். தொடர்ச்சியான இந்த விமர்சனங்களை தொடர்ந்து என்டிஏ கூட்டணியின் தலைமை நாங்கள் தான் என அதிமுக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

என்டிஏ கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர்
ஆனாலும் கூட்டணிக்கு சீட்டுகள் ஒதுக்குவது தொடர்பாக பேசுவதற்கு எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது அரசியல் களத்தில் விமர்சனங்களை கிளப்பியது. இதனையடுத்து பாஜகவின் மாநில தலைவர் என்டிஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் இபிஎஸ் தான் எனக்கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனாலும் திமுகவும் கூட்டணி கட்சிளும் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வருகின்றனர்.

கனிமொழி விமர்சனம்
குறிப்பாக தேர்தலுக்கு பின்பாக அதிமுகவின் பொதுச்செயலாளரை மாற்றி விடுவார்கள் எனக்கூறி ஷாக் கொடுத்தனர். இதனிடையில் கனிமொழி எம்பி நேற்றைய தினம் பரப்புரையில் பீகாரில் பலமுறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார் நிலைமை தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படும். அவரை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக பாஜக அனுப்பி விடும் என்ற தெரிவித்தார். அவருடைய இந்த பேச்சு பரப்பினை கிளப்பியது.

எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
இதனையடுத்து ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, “எனக்கு தமிழ்நாட்டில் வேலை இல்லை என்கிறார் கனிமொழி. வேற எங்க வேலை உள்ளது? நீயாவது வேலை கொடுமா? நாக்கு இருக்கிறது என்பதற்காக எதனை வேண்டுமானலும் பேசலாமா? என்னை பற்றி நிறைய பேசி இருக்கிறார் கனிமொழி. நான் அவர் குறித்து எதற்காக பேச வேண்டும். செல்லாத காசை பற்றியெல்லாம் பேசி என்ன பிரயோஜனம் என கடுமையான விமர்சனங்களை எடப்பாடி பழனிசாமி முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

Source link