பிரேமலதா விஜயகாந்த் கொடுக்கும் கிப்ட்… விருத்தாசலம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு- தேமுதிகவினர் குஷி! – premalatha vijayakanth surprise gift for dmdk cadres to work win in virudhachalam constituency

விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பிரேமலதா விஜயகாந்த், தனது வெற்றிக்காக கட்சியினரிடம் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி வருகிறார். மேலும் பொதுமக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்.

2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் திமுக உடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. இக்கட்சியின் 21 ஆண்டுகால அரசியலில் முதல்முறை இத்தகைய கூட்டணி அமைந்துள்ளது. மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் பெற்று பிரச்சாரக் களத்திற்கு வந்துவிட்டனர். தேமுதிகவின் வீழ்ச்சியின் போது அக்கட்சியில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் வெளியேறி மாற்று கட்சிகளில் ஐக்கியமாகினர். இனி அரசியல் எதிர்காலமே இல்லை என்று கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு மத்தியிலும் கேப்டன் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா உடன் தொடர்ச்சியாக பயணித்து வருபவர்களுக்கு, இந்த தேர்தலில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

தேமுதிகவினர் உடன் பிரேமலதா ஆலோசனை

இந்நிலையில் விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகரன் போட்டியிடுகின்றனர். இவரும் தங்கள் தொகுதியிலும், தேமுதிகவினர் போட்டியிடும் தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் விருத்தாசலம் தொகுதியில் கட்சியினர் உடன் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது, சேகர் என்ற நிர்வாகி பேசுகையில் நல்லூர் ஒன்றியத்தில் 70 பூத்கள் இருக்கின்றன. அதில் எந்த பூத்தில் அதிக வாக்குகளை பெற்று தருகிறார்களோ, அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் அண்ணி கையால் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

ராஜ்யசபா சீட்க்கு No சொன்ன அதிமுக? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி…!

அண்ணியார் கொடுக்கப் போகும் கிப்ட்

இதைக் கேட்டு புன்னகை செய்த பிரேமலதா விஜயகாந்த், சேகர் கையால் யார் ஒரு லட்ச ரூபாய் வாங்க தயாராக இருக்கிறார்கள்? ரெடியா? என்று கேட்கிறார். அதற்கு தேமுதிகவினர் மிகவும் மகிழ்ச்சியுடன் நாங்கள் ரெடி என்று பதிலளிக்கின்றனர். தொடர்ந்து பேசிய அவர், அண்ணிகிட்ட வேற வேற கிப்ட் எல்லாம் கிடைக்கும். என்னை பொறுத்தவரை செயலில் தான் அனைத்தையும் காட்ட விரும்புகிறேன். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கும். கேப்டனும் அப்படித் தான். உங்க அண்ணியும் அப்படித் தான். இனி உங்களுடன் தான் இருக்கப் போகிறேன். இங்கேயும் வீடு பார்க்க சொல்லிவிட்டேன். விருத்தாசலத்தில் தான் தங்கப் போகிறேன்.

விருத்தாசலத்தில் வீடு எடுக்க சொல்லியாச்சு

சென்னையில் வேலை இருக்கும் போது அங்கு செல்வேன். இங்கு வேலை இருக்கும் போது வருவேன். விருத்தாசலம் வந்தால் என்னவெல்லாம் வேலை இருக்கிறது என்று பார்த்து, இரண்டு, மூன்று நாட்கள் தங்கி முழுவதுமாக முடித்து விட்டு தான் சென்னை புறப்படுவேன். ஒரு 5 மணி நேரம் தான். காரில் தூங்கி கொண்டே போய் விடுவேன். இன்று நேற்றா வருகிறேன். தலைவர் உடன் 2006ல் இருந்து வருகிறேன். எல்லாவற்றையும் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறோம். தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள தயாராகுங்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார். விருத்தாசலம் தொகுதியை பொறுத்தவரை 1952 முதல் சட்டமன்றத் தேர்தல்களை சந்தித்து வருகிறது.

2026 தேர்தலில் இருமுனைப் போட்டி – மீண்டும் பாமக

வன்னியர்கள் அதிகமுள்ள தொகுதி. தேமுதிகவிற்கும், பாமகவிற்கு தொடக்க காலத்தில் மோதல் ஏற்பட்ட நிலையில், அவர்களின் கோட்டையில் நின்று வெற்றி பெற்று காட்டுகிறேன் என்று சவால் விட்டு, 2006ல் விஜயகாந்த் எம்.எல்.ஏ ஆனார். அடுத்த முறை தேமுதிகவை சேர்ந்த வி.முத்துக்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வென்றன. இம்முறை தேமுதிக பிரேமலதா, பாமக தமிழரசி ஆதிமூலம், ராமதாஸ் தரப்பில் சுரேஷ், நாம் தமிழர் சார்பில் ஆனந்தி, தவெக சார்பில் எஸ்.விஜய் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இருப்பினும் 2006ஐ போல தேமுதிக, பாமக இடையில் இருமுனைப் போட்டியே பிரதானமாக அமைந்துள்ளது.