புதுச்சேரியில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு, அமலுக்கு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதுச்சேரி பாஜகவின் தேர்தல் வாக்குறுதி
இந்த ரயிலானது விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும். ஆனால் இந்த ரயில் சேவையின் வருகை என்பது 2026 தேர்தல் முடிவுகளையும் பொறுத்திருக்கிறது. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வருகிறதா? இல்லையா? என்பதை பொறுத்தே அமையும். இதற்கிடையில் புதிய அதிவிரைவு ரயில் சேவையின் வருகையால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பலரும் அலசி ஆராயத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரி டூ மைசூரு; ரயில், பேருந்து, விமானப் பயணம்
தற்போது புதுச்சேரியில் இருந்து மைசூரு செல்வதற்கு பயன்பாட்டில் உள்ள ரயில்கள் மூலம் பயணிக்க 16 மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. இதற்கு 400 முதல் 1,600 ரூபாய் டிக்கெட் கட்டணம். பேருந்துகளில் புறப்பட்டால் 9 மணி நேரம் முதல் 10 மணி நேரமாகிறது. இதற்கு 700 முதல் 1,200 ரூபாய் ஆகிறது. விமான சேவையாக பார்த்தால் 5 முதல் 7 மணி நேரம் ஆகும். ஏனெனில் பெங்களூரு சென்று, அங்கிருந்து மாறி செல்ல வேண்டும். இதற்கு 6,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை ஆகக்கூடும்.
கடற்கரை முதல் ஆரோவில் வரை – சுற்றுலா ஸ்பெஷல்
இதற்கு மத்தியில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயன்பாட்டிற்கு வந்தால் மொத்தமுள்ள 600 கிலோமீட்டர் தூரத்தை அதிகபட்சமாக 8 மணி நேரத்தில் சென்றுவிடலாம். டிக்கெட் கட்டணமாக ஏசி சேர் கார், எக்ஸிக்யூடிவ் சேர் காரில் 1,200 முதல் 2,500 ரூபாய் வரை இருக்கலாம். புதுச்சேரி பிரெஞ்சு காலனிய நகரம் என்றால், மைசூரு அரண்மனை நகரம். இரண்டுமே சுற்றுலாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
எனவே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை சுற்றுலா பயணிகளுக்கு பெரிய பயனை அளிக்கும். புதுச்சேரி கடற்கரை, ஆரோவில் ஆகியவை வார இறுதி அல்லது விடுமுறை நாட்களில் பயணிக்க பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும்.
பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கு வசதி
மேலும் புதுச்சேரி மருத்துவ சுற்றுலாவின் ஹப்பாக மாறி வருகிறது. எனவே இது சார்ந்தும் பயணங்கள் அதிகரிக்கும். இடைப்பட்ட பெங்களூரு நகரம் ஐடி தலைநகர் என்று அழைக்கப்படுகிறது. ஏராளமான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் இருக்கின்றன.
இங்கு வேலைவாய்ப்புகள் கொட்டி கிடப்பதால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் வசிப்போர் வேலைக்காக சென்று வர உதவிகரமாக இருக்கும். புதுச்சேரி – மைசூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலால் சுற்றுலா மற்றும் சேவை வளர்ச்சி அடையும். ஏராளமான ஓட்டல்கள், உணவகங்களை மக்கள் பயன்படுத்துவர்.
குவியும் தொழில் முதலீடுகளும், வளரும் ரியல் எஸ்டேட் துறையும்
உற்பத்தி துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களும் மேம்படும். குறிப்பாக ரியல் எஸ்டேட் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும். இந்த இரு நகரங்கள் மட்டுமின்றி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இடைப்பட்ட எந்தெந்த ரயில் நிலையங்களில் நிற்கிறதோ, அங்கெல்லாம் மக்கள் குடியேற விரும்புவர்.
நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், மக்களின் அடிப்படை வசதிகள் சார்ந்த விஷயங்கள் தேடி வரும். இதுதொடர்பான முதலீடுகளால் ரியல் எஸ்டேட் துறை வளரும். எனவே விரைவாக புதுச்சேரி வந்தே பாரத் ரயிலை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
