செந்தில் பாலாஜி
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக கரூரில் போட்டியிட்ட வென்றார் செந்தில் பாலாஜி. அங்கு அவர் வலுவாக உள்ள நிலையில், இந்த முறை தொகுதி மாற்றம் நடந்துள்ளது. கரூரில் இருந்து அவரை கோவை தெற்கு தொகுதிக்கு வேட்பாளாராக அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். செந்தில் பாலாஜி தொகுதி மாற்றம் செய்யப்பட்டதில் இருந்தே, தமிழ்நாடு அரசியல் களம் கோவையை உற்றுநோக்கி வருகிறது. அதோடு எதிர்கட்சிகளுக்கும் செந்தில் பாலாஜி கோவைக்கு தொகுதி மாறியுள்ளது சவாலாக அமைந்துள்ளது.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு இழப்பு
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள செந்தில் பாலாஜி கோவையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து பேசியுள்ளார். கடந்த முறை இரண்டு தொகுதிகளில் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்துள்ளதாகவும், அரசின் திட்டங்கள் அவர்களிடம் சென்று சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கோவையில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும் எனவும் நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.
பத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி
மேலும் கோவையில் உள்ள பத்து இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார் செந்தில் பாலாஜி. கடந்த முறை ஒரு தொகுதியில் கூட கோவையில் வெற்றி பெற்றாத நிலையில், இந்த முறை மொத்தமாக திமுக கூட்டணி கைப்பற்றும். அந்தளவுக்கு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
கோவை மண்டல பொறுப்பாளர்
கரூரில் இருந்து கோவையில் முதல்வர் போட்டியிட சொன்னதால் தொகுதி மாறி போட்டியிடுவதாக தெரிவித்துள்ள செந்தில் பாலாஜி, கடந்த தேர்தலுக்கு பின்பு கோவை மண்டல பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போதில் இருந்தே அனைத்து இடங்களுக்கும் நேரடியாக சென்று மக்களை சந்தித்துள்ளதாகவும் பேசியுள்ளார் செந்தில் பாலாஜி.
எஸ்.பி. வேலுமணி
அவருடைய பேச்சின் மூலமாக தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே கோவையில் தேர்தல் சம்பந்தமான பணிகளை செந்தில் பாலாஜி துவங்கியுள்ளது உறுதியாகியுள்ளது. மற்றொரு பக்கம் கோவை அதிமுகவின் கோட்டை என்பதை இந்த தேர்தலிலும் நிரூபிப்பதற்காக எஸ்.பி. வேலுமணியும் தீவிரமாக வேலை செய்து வருகிறார். சமீபத்தில் பிரச்சாரத்தில் கோவையில் அதிமுக ஜெயிக்க வேண்டியது நம்முடைய மான பிரச்சனை என எஸ்.பி. வேலுமணி பேசினார்.
தொகுதி மாறிய வானதி சீனிவாசன்
கடந்த முறை பாஜக வானதி சீனிவாசன் போட்டியிட்டு வெற்றி பெற்ற கோவை தெற்கு தொகுதியில் இந்த முறை செந்தில் பாலாஜி களம் இறங்குகிறார். வானதி சீனிவாசன் கோவைக்கு வடக்கு தொகுதி மாறியுள்ளார். இதனிடையில் அண்ணாமலையும் கோவையில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்களுக்காக வேலை செய்து வருகிறார். இதனால் இந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் அதிகம் கவனம் பெறும் பகுதியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
