கோயம்புத்தூர்,
கோவை புலியகுளம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி வயலட் கிளாடியா (46 வயது). இவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் புலியகுளம் கல்லுக்குழி பகுதியைச் சேர்ந்த தாய்-மகள் வேலை பார்த்து வந்தனர். இதில் அந்த பெண்ணின் 23 வயது மகள் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரை பிரிந்தார். எனவே அந்த பெண்ணை தனது வீட்டில் தங்கி வேலை பார்க்கும்படி வயலட் கிளாடியா கூறி உள்ளார்.
இந்த நிலையில் வயலட் கிளாடியா தனது 4 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் செயினை கழற்றி பூஜை அறையில் வைத்திருந்தார். மறுநாள் தங்க நெக்லஸ் மாயமாகி இருந்தது. இதற்கிடையே வேலைக்கார இளம்பெண் திடீரென வேலையில் இருந்து நின்று விட்டு மாயமானது தெரிய வந்தது.
இது குறித்து வயலட் கிளாடியா அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் இளம்பெண் தங்க நகையை திருடி அடகு கடையில் வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். திருடப்பட்ட 4 பவுன் நெக்லசை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், நகை திருடிய இளம்பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சுற்றுலா செல்ல விரும்பிய இளம்பெண், வேலை பார்த்த வீட்டில் நகையை திருடி உள்ளார். பின்னர் அவர், அந்த வாலிபருடன் பழனி, திருவண்ணாமலைக்கு சுற்றுலா சென்று உள்ளார் என்று தெரிவித்தனர்.
