தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இதனால் முக்கிய நீர் நிலைகளில் தண்ணீர் குறைய ஆரம்பித்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமும் குறைந்துள்ளது.எனினும், கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது
.இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 300 கனஅடியாக வந்தது.இதையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது.இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 1000 கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
மேலும் அவர்கள் தொங்குபாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் மீன் சாப்பாடு வாங்கிக்கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.நீர்வரத்தை தமிழகம்-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
