சென்னை,
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்குப் பின் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வரும்நிலையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். உரிய ஆதாரங்களை சமர்பித்தால் ஒரிரு தினங்களில் சம்பந்தப்பட்டவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை உள்ளிட்டவற்றை உரிமையாளர்கள திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நகைகளை கொண்டு செல்வது தொடர்பாக விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி நகைக்கடை ஒன்றின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு, உரிய ஆவணங்கள் வைத்திருந்தும், 6 முறை தங்கள் நிறுவனத்தின் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும். 6 நாட்களுக்குப் பிறகுதான் அந்த நகைகள் மீண்டும் கிடைத்தன. இதன் காரணமாக தங்களுக்கு வர்த்தக இழப்பு, நிதி இழப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், தற்போது பறிமுதல் செய்யப்படும் நகை, பணம் ஆகியவற்றிற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தால் ஒரே நாளில் அவை திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இது சம்பந்தமாக விதிகள் வகுக்க உத்தரவிட முடியாது என்றனர். இதையடுத்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இதை ஏற்று வழக்கை திரும்ப பெற அனுமதித்த நீதிபதிகள், தேர்தலுக்குப் பிறகு இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் மனு அளிக்கலாம் எனவும், அதை தேர்தல் ஆணையம் சட்டப்படி பரிசளித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
