தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது.. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுகவும், ஆட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று அதிமுகவும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இந்த தேர்தலில் முக்கிய அங்கமாக திகழ்கிறது.. தேர்தலில் முதன்முறை களமிறங்க உள்ள தவெக எந்த கட்சிக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும், யாருடைய வாக்குகளை பிரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.. எனவே இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. சுமார் 8.5% வாக்கு வங்கியை வைத்திருக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது..
இந்த நிலையில் விஜய் அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார் என்று மத்திய அமைச்சரும் பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.. கோவையில் பிரபல செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த எம்.ஜி.ஆர், உடனடியாக முதலமைச்சர் ஆகவில்லை.. எம்.ஜி.ஆர் பல ஆண்டுகள் திமுகவில் வேலை பார்த்தார்.. செயலாளராகவும், பொருளாளராகவும் தமிழ்நாடு முழுவதும் கொள்கை பரப்பு செயலாளராகவும் பணியாற்றினார்..
எனக்கு தெரிந்து அரசியலுக்கு வந்த் 30 ஆண்டுகளுக்கு பிறகு தான் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆனார்.. நிச்சயம், விஜய் கோவைக்கு வந்தால் ஒரு திரைப்பட நடிகராக அவரை பார்க்க கூட்டம் வரும்.. ஒரு நடிகர், நடிகர் தான்.. அவர் அரசியலுக்கு சரிபட்டு வரமாட்டார்..” என்று கூறினார்..
