தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனைப் போட்டி நிலவுகிறது. ஒருபுறம் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் நாளுக்கு நாள் அனல் பறந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மறுபுறம் தேர்தலை நடத்துவது தொடர்பான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.. வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.. அவரின் மனுவில் “ தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்படுகிறது.. பணம், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை வாக்காளர்களுக்கு லஞ்சமாக வழங்குகின்றனர்..
அரசியல் சாசன விதிகளுக்கு மட்டுமல்லாமல், இது தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது.. எனவே தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.. வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
