வட இந்தியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து மிகப் பெரிய நடிகராக துடிக்கும் நட்டி நட்ராஜை, அடுத்த எம்.ஜி.ஆராகவே கருதுகிறார் ஜமீன்தாரான தம்பி ராமையா. தன் சொத்துக்களை விற்று அவரை முன்னேற்றுகிறார். படிப்படியாக முன்னேறி தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகும் நட்டி நட்ராஜுக்கு, அரசியல் ஆசையையும் தம்பி ராமையா ஏற்படுத்துகிறார். இதை எடுத்து பல தரப்பில் இருந்தும் அவருக்கு நெருக்கடிகள் ஏற்படுகிறது.
எல்லாவற்றையும் மீறி அரசியல் கட்சி தொடங்கும் நட்டி நட்ராஜ், முதல்-அமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். அவருக்கு தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் வலதுகரமாக செயல்படுகிறார்கள். இதற்கிடையில் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுகிறது.
சொந்த வாழ்க்கையிலும், அரசியல் களத்திலும் பல பிரச்சினைகளை சந்திக்கும் நட்டி நட்ராஜ் திடீரென முக்கிய முடிவு ஒன்றை எடுக்கிறார். அந்த முடிவு என்ன? அதன் பின்னணி என்ன? தேர்தல் முடிவுகள் என்ன ஆனது? என்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதி கதை.
தடுமாறி, தடுமாறி தமிழ் பேசும் நடிகராகவும், சாதுரியமாக காய் நகர்த்தும் அரசியல்வாதியாக நட்டி நட்ராஜ் கலக்குகிறார். நடை, உடை, பாவனை என அனைத்திலும் ‘புதியவரை’ பிரதிபலிக்கிறார்.
ஜமீன்தாராக வரும் தம்பி ராமையாவின் நடிப்பு கவனிக்க வைக்கிறது. திருப்பங்கள் கொண்ட அவரது கதாபாத்திரம் ரசிப்பு. நெல்லை தமிழ் பேசும் எம்.எஸ்.பாஸ்கர், எதார்த்த நடிப்பால் கவரும் இளவரசு ஆகியோரும் முத்திரை பதிக்கிறார்கள்.
ஷ்ரித்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், தலைவாசல் விஜய், ரெடின் கிங்ஸ்லி என அத்தனை பேரும் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
பி.ஜி. முத்தையாவின் ஒளிப்பதிவும், தர்புகா சிவாவின் இசையும் படத்துடன் ஒன்றச் செய்கிறது.
அனைவருக்கும் தெரிந்த அரசியல் நகர்வுகளை கமர்ஷியலாக சொன்ன விதம் பலம். லாஜிக் மீறல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்கிறது. சிலருக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்து, சில பிரபலங்களை மறைமுகமாக நையாண்டி செய்த விதம் நல்ல யுக்தி.
சமகால அரசியலை பொழுதுபோக்கு கதைக்களத்தில் புகுத்தி, சிரிக்கவும், ரசிக்கவும் வைத்திருக்கிறார் இயக்குனர் உமாபதி ராமையா.
