படக்குறிப்பு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் (இடதுபுறம்) இஸ்ரேல் மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை முன்வைத்தார்.
15 நிமிடங்களுக்கு முன்னர்
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப்பின் அறிக்கையை ‘வெட்கக்கேடானது மற்றும் கண்டிக்கத்தக்கது’ என்று இஸ்ரேல் விவரித்துள்ளது.
கவாஜா ஆசிப் இஸ்ரேலை ‘மனிதகுலத்தின் மீதான கறை’ என்றும், ‘புற்றுநோய் தேசம்’ என்றும் அழைத்திருந்தார். இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்வினையாற்றியுள்ளது.
இந்த போர்நிறுத்தத்தில், அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் நடைபெறுகிறது. இருப்பினும், பாகிஸ்தானின் பங்கு குறித்து இஸ்ரேல் கவலை கொண்டுள்ளது.
பாகிஸ்தானை ‘நம்ப முடியாது’ என்று இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் இதுவரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை, எனவே இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை.
கவாஜா ஆசிப்பின் கூற்று மற்றும் இஸ்ரேலின் பதில்
படக்குறிப்பு, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் டிஜியன் சார், பாகிஸ்தான் யூத-விரோத நாடு என்று குற்றம் சாட்டினார்.
வியாழக்கிழமையன்று, கவாஜா ஆசிப் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில், “இஸ்ரேல் ஒரு தீய சக்தி மற்றும் மனிதகுலத்தின் மீதான கறை. இஸ்லாமாபாத்தில் அமைதி பற்றி விவாதிக்கப்படும் வேளையில், இஸ்ரேல் லெபனானில் இனப்படுகொலை செய்து வருகிறது. முதலில் காஸாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது, இப்போது லெபனானிலும் அதையே செய்கிறது. அதன் ரத்த வெறி தடையின்றித் தொடர்கிறது. ஐரோப்பிய யூதர்களிடமிருந்து விடுபட பாலத்தீன மண்ணில் இந்தப் புற்றுநோய் போன்ற நாட்டை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரியட்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
அதனையடுத்து, இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், “தன்னை ‘அமைதியின் தூதுவர்’ என்று அழைத்துக்கொள்ளும் ஓர் அரசாங்கத்திடமிருந்து வரும் இத்தகைய வெளிப்படையான யூத எதிர்ப்பு மற்றும் மோசமான குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. யூத அரசை ‘புற்றுநோய்’ என்று அழைப்பது அதன் அழிவிற்கு அழைப்பு விடுப்பதற்குச் சமமாகும். தன்னை அழிக்க சபதம் ஏற்கும் பயங்கரவாதிகளிடமிருந்து இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளும்,” என்று எழுதினார்.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகமும் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டது.
அதில், “பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் அழிய வேண்டும் என்று விரும்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது. எந்தவொரு அரசாங்கத்திடமிருந்தும், குறிப்பாக ஒரு சமாதானத் தூதர் என்று கூறிக்கொள்ளும் அரசாங்கத்திடமிருந்து இத்தகைய அறிக்கை எதிர்பார்க்கப்படுவதில்லை”எனக் கூறப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
படக்குறிப்பு, லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்து, ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்டில் ஒரு போராட்டம் நடைபெற்றது (படம்: ஏப்ரல் 9)
இந்த போர்நிறுத்தத்தில், லெபனான் தொடர்பாக இஸ்ரேலுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் முதல் நாளிலேயே வெளிப்பட்டன.
அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையிலான போர்நிறுத்த நிபந்தனைகளில் லெபனான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும் அடங்கும் என்று இரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் கூறுகின்றன.
போர்நிறுத்தத்திற்குப் பிறகும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களை, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று அவை கூறுகின்றன.
இருப்பினும், போர்நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே தெரிவித்துள்ளன.
இருப்பினும், லெபனானுடன் கூடிய விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தனது அமைச்சரவையைக் கேட்டுக் கொண்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வியாழக்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குமாறு லெபனானிடமிருந்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை ஏற்று, புதன்கிழமையன்று தனது அமைச்சரவைக்கு இந்த கோரிக்கையை விடுத்ததாக ஹீப்ரு மொழியில் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உரையாடலின் முக்கிய நோக்கம் ஹெஸ்பொலாவின் ஆயுதங்களைக் களைவதும், இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே அமைதி உறவுகளை ஏற்படுத்துவதும் ஆகும் என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் குறித்து கவலை கொண்டுள்ள இஸ்ரேல்
இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நிறுத்தத்திற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது, ஆனால் பாகிஸ்தான் ஒரு நம்பகமான தரப்பு அல்ல என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரூவன் அசார், “பாகிஸ்தானை ஒரு நம்பகமான தரப்பாக நாங்கள் கருதவில்லை. அமெரிக்கா தனது சொந்த காரணங்களுக்காக பாகிஸ்தானின் உதவியைப் பெற முடிவு செய்துள்ளதாக நான் நம்புகிறேன்” என்று கூறினார்.
அசார் கூறுகையில், “ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு அமெரிக்கா எவ்வாறு கத்தார் மற்றும் துருக்கி போன்ற நாடுகளைப் பயன்படுத்தியது என்பதை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். நாம் அடைய விரும்பும் முடிவைப் பெறுவதில் அமெரிக்காவுடன் ஒருங்கிணைப்பைப் பேணுவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,” என்றார்.
இதற்கிடையில், இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, போர்நிறுத்தத்தை ஏற்படுத்திய முயற்சிகளுக்காக பாகிஸ்தான் பிரதமர் மற்றும் பீல்ட் மார்ஷலுக்கு நன்றி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தை அமெரிக்காவும் அங்கீகரித்தது.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பும் போர்நிறுத்த அறிவிப்புக்காக அமெரிக்காவிற்கும் இரானுக்கும் நன்றி தெரிவித்தார்.
பாகிஸ்தான்-இஸ்ரேல் உறவுகள்
படக்குறிப்பு, 2025 ஜூன் மாதத்தில், இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு எதிராகவும் இரானுக்கு ஆதரவாகவும் பாகிஸ்தானில் போராட்டங்கள் நடைபெற்றன.
சமீபத்திய மாதங்களில் லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், ஒரு தனி பாலத்தீன அரசை நிறுவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தும் தற்போதைய தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவை விமர்சிப்பதைத் தவிர்த்தாலும், இஸ்ரேலின் நடவடிக்கையை பாகிஸ்தான் பகிரங்கமாக விமர்சித்ததுடன், இரானுக்குத் தனது ஆதரவையும் தெரிவித்தது.
போரின் ஆரம்பத்திலேயே இரானின் உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
காமனெயியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்ததோடு, அந்தத் தாக்குதல்களைக் கண்டித்த முதல் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.
கடந்த ஜூன் மாதம், இரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் தளங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இது பாகிஸ்தானில் பரவலான இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டங்களைத் தூண்டியது.
மேலும், இந்த ஆண்டு பிப்ரவரியில், ஜெருசலேமில் நடந்த முக்கிய அமெரிக்க யூத அமைப்புகளின் தலைவர்கள் மாநாட்டில் உரையாற்றிய முன்னாள் இஸ்ரேலிய பிரதமர் நப்தாலி பென்னட், இப்பகுதியில் துருக்கி, கத்தார், இஸ்லாம் சகோதரத்துவம் மற்றும் அணு ஆயுதம் ஏந்திய பாகிஸ்தான் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய அச்சுக் கூட்டணி உருவாகி வருவதாகக் கூறினார்.
இந்தக் கூட்டணி இஸ்ரேலுக்கு எதிரான விரோதப் போக்கைத் தூண்டி வருவதாகவும், சவுதி அரேபியாவைத் தன் வசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நப்தாலி கூறினார்.
பாகிஸ்தான் இதுவரை இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை.
இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் இல்லை. பாகிஸ்தானுக்குள் இஸ்ரேலுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
பாகிஸ்தானுக்கு இஸ்ரேலுடன் எந்தவிதமான தகராறுகளோ மோதல்களோ இல்லை.
இருப்பினும் அது இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. அரபு நாடுகளுடனான இஸ்லாமிய ஒற்றுமையை வெளிப்படுத்தவே பாகிஸ்தான் இவ்வாறு செய்கிறது.
பாகிஸ்தானில் இஸ்ரேல் ஒரு எதிரியாகப் பார்க்கப்பட்டாலும், பாகிஸ்தானுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடும் அளவிற்கான கோபம் இஸ்ரேலில் காணப்படவில்லை.
2018-ஆம் ஆண்டில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்தியாவிற்கு வருகை தந்தார்.
இந்தப் பயணத்தின்போது நெதன்யாகு, “இஸ்ரேல் பாகிஸ்தானின் எதிரி அல்ல, பாகிஸ்தானும் நமது எதிரியாக இருக்கக்கூடாது” என்று கூறியிருந்தார்.
இதற்குப் பிறகு, இஸ்ரேல் பிரச்னையை மறுபரிசீலனை செய்வது குறித்து பாகிஸ்தானில் பேச்சு எழுந்தது.
ஆனால், அப்போதைய பாகிஸ்தான் செனட் தலைவர் ரஸா ரப்பானி, ‘இந்தியா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே உருவாகி வரும் கூட்டணியே இஸ்லாம் உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்’ என்று கூறி இஸ்லாம் உலகை எச்சரித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
