அபுதாபி,
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் காரணமாக அமீரகத்தின் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக பொதுமக்கள் சிலர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதன் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி பி.ஏ.பி.எஸ். இந்து கோவில், கிறிஸ்தவ தேவாலங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்காலிகமாக மூடப்பட்டன. தற்போது 2 வார கால போர் நிறுத்தம் காரணமாக தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து அபுதாபி பி.ஏ.பி.எஸ். இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
“தற்காலிக போர் நிறுத்தம் காரணமாக இந்து கோவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்படுகிறது. செவ்வாய் முதல் ஞாயிறு வரை காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும். கோவிலில் வழிபாடு செய்ய விரும்புவோர் ஆன்லைன் மூலம் வழக்கம் போல் முன்பதிவு செய்து பங்கேற்க வேண்டும். எனினும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
