விருத்தாசலம் தொகுதி: நட்சத்திர வேட்பாளர்களின் மோதல்கள். அங்கிருக்கும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்பது தொடர்பாக இங்கு விரிவாக காணலாம்.
சாதி அரசியல் மற்றும் கூட்டணிக் கணக்குகள்
விருத்தாசலம் தொகுதியில் தலித் சமூகத்தினர் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களுடன் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வாக்குகளும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. பிரேமலதாவை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் தமிழரசி போட்டியிடுகிறார். “வெளி ஊர்க்காரர்களைத் தேர்ந்தெடுக்காமல், உங்கள் அருகிலேயே இருந்து சேவை செய்யக்கூடிய உள்ளூர் வேட்பாளரைத் தேர்ந்தெடுங்கள்” என்ற பிரச்சாரத்தை பாமக முன்வைத்துள்ளது. வன்னியர் சமூக வாக்குகளைப் பாமக நம்பியிருக்கும் வேளையில், திமுக மற்றும் தேமுதிகவின் ஒருங்கிணைந்த பலம் தனக்கு வெற்றியைத் தேடித்தரும் என்று பிரேமலதா நம்பிக்கையுடன் இருக்கிறார். கடந்த முறை காங்கிரஸ் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை கூட்டணி பலம் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகத் தேமுதிகவினர் கருதுகின்றனர்.
தேர்தல் களத்தில் புதிய சவால்கள்
வழக்கமான கூட்டணிகளுக்கு இடையே, இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் மற்றும் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவற்றின் வருகை தேர்தல் களத்தில் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது. விஜய்யின் கட்சி இளைஞர்களின் வாக்குகளைப் பிரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த வேல்முருகன் இந்த முறை தனித்துப் போட்டியிடுவது பாமக மற்றும் திமுக ஆகிய இரு தரப்பினரின் வாக்கு வங்கியிலும் சரிவை ஏற்படுத்தக்கூடும். இத்தகைய பலமுனைப் போட்டிகளால் விருத்தாசலத்தின் தேர்தல் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகள்
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில், தொகுதியின் வளர்ச்சி சார்ந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமலேயே உள்ளன. மணிமுத்தா நதியைத் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் பிரதான கோரிக்கையாகும். மேலும், ஒரு வேளாண் பொறியியல் கல்லூரி, புதிய புறநகர் பேருந்து நிலையம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்துதல் மற்றும் பெண்களுக்கெனத் தனியாக அரசு கலைக் கல்லூரி அமைத்தல் போன்றவை மக்களின் நீண்டகாலப் போராட்டங்களாக உள்ளன. குறிப்பாக, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLCIL) இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை இந்தப் பகுதியில் உள்ள ஏரிகளுக்குத் திருப்பி விட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக உள்ளது.
வாக்குறுதிகளும் சவால்களும்
விருத்தாசலத்தைத் தனி மாவட்டமாக அறிவிப்பேன் என்றும், இத்தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என்றும் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்துள்ளார். பீங்கான் தொழிற்சாலைகள் தவிர்த்து பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் இல்லாத சூழலில், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே தனது முக்கிய நோக்கம் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக அரசு அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாமகவினர் விமர்சித்து வருகின்றனர். விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட இத்தொகுதியில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வு காண்பவர்கள் யாரோ, அவர்களுக்கே இந்த முறை வெற்றி வாய்ப்பு கிட்டும் சூழல் நிலவுகிறது.
