Exclusive: விஜயுடன் பயணிப்பது கடவுள் கொடுத்த வரம்-புஸ்ஸி ஆனந்த் பேட்டி! – 28 years journey with vijay an emotional interview with bussy anand

விஜயுடன் பயணிப்பது கடவுள் கொடுத்த வரம் என்று தவெக கட்சியின் பொதுச்செயலாளரும், திநகர் தொகுதி வேட்பாளருமான புஸ்ஸி ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறந்து வரும் வேளையில், தியாகராய நகர் (திநகர்) தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிரச்சாரம் மற்றும் சமயம் தமிழுக்கு அளித்த பிரத்யேக நேர்காணல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 28 ஆண்டுகளாக அக்கட்சியின் தலைவர் விஜய் அவர்களின் நிழலாகவும், நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் பயணித்து வரும் இவர், தனது தொகுதி மக்களுக்கான கனவுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தளபதி விஜய்யுடனான 28 ஆண்டுகால பயணம்

தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் விஜய் அவர்களின் தாக்கம் குறித்துப் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- “தளபதி விஜய் வெறும் திரை நட்சத்திரம் மட்டுமல்ல, அவர் ஒரு மிகச்சிறந்த மனிதாபிமானி. கடந்த 28 வருடங்களாக அவரோடு பயணிப்பதைக் கடவுள் கொடுத்த வரமாகவே கருதுகிறேன். எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தன்னைப் பார்க்க வருபவர்களுக்கு அவரே காபி, மோர் கொடுத்து உபசரிக்கும் அந்தப் பணிவுதான் அவரை ஒரு தலைவராக உயர்த்தியுள்ளது. விமர்சனங்களைக் கண்டும் கோபப்படாமல், தனது கடமையில் மட்டும் கவனம் செலுத்தும் அவரது பாணியையே நானும் பின்பற்றி வருகிறேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நெகிழவைத்த பாட்டியின் அன்பு

தி.நகர் தொகுதியில் தனக்குக் கிடைக்கும் வரவேற்பு குறித்துப் பேசிய அவர், சமீபத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். “பிரச்சாரத்தின் போது சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி, இருட்டில் செல்போன் வெளிச்சத்தை வைத்துக்கொண்டு விசில் அடித்து எனக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். இதைக் கண்டபோது என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது. எனக்குக் கிடைக்கும் இந்த ஆதரவு அனைத்தும் எனது தலைவர் விஜய்க்கு மக்கள் தரும் அங்கீகாரம்,” என்றார்.

40 ஆண்டுகால பட்டா பிரச்சினைக்குத் தீர்வு

திநகர் தொகுதியின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அவர், வெளிப்பார்வைக்கு வசதியான பகுதியாகத் தெரிந்தாலும், உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார். “40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டா இல்லாமல் தவிக்கும் ஏழை எளிய மக்களின் நிலையை மாற்ற வேண்டும் என்பதே எனது முதல் இலக்கு. மழைக்காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். சாத்தியமில்லாத வாக்குறுதிகளை நாங்கள் எப்போதும் கொடுக்க மாட்டோம்; எதைச் செய்ய முடியுமோ அதை நிச்சயம் செய்வோம்,” என்று உறுதியளித்தார்.

முக்கிய வாக்குறுதிகள்:

திநகர் தொகுதி மக்களுக்காக அவர் முன்வைத்துள்ள முதன்மையான வாக்குறுதிகள்:

  • வீட்டுப் பட்டா: பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பட்டாக்களைப் பெற்றுத் தந்து, தகுதியானவர்களுக்கும் வீடுகள் கட்டித் தரப்படும்.
  • பாதுகாப்பு: பெண்கள் மற்றும் முதியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
  • போதை இல்லா சமூகம்: இளைஞர்களை நல்வழிப்படுத்தப் போதைப் பொருள் நடமாட்டமில்லாத சூழல் உருவாக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும்.
  • குடிநீர் வசதி: மக்கள் தெருக்களில் வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் நிலையை மாற்றி, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

மக்களின் தேவைகளை அவர்கள் எங்களிடம் கேட்பதற்கு முன்னரே நிறைவேற்றித் தருவதே எங்களது நோக்கம். தளபதி விஜய்யின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் போது, திநகர் தொகுதி ஒரு முன்மாதிரி தொகுதியாகத் திகழும்,” என அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.