காதலிக்க மறுத்த மாணவிக்கு நடந்த கொடூரம்.. வாலிபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீசார்

நகரி,

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டதை சேர்ந்த ஸ்ரீனிவாசன், நாகமணி தம்பதியின் மகள் (வயது 17), தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். அதே மாவட்டதை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை காதலிப்பதாக கூறி திருமணம் செய்ய வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதை மாணவி ஏற்காததால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், நேற்று முன்தினம் மாணவியின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்துள்ளார். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்வோம் வா என மாணவியை அழைத்துள்ளார். அதற்கு மறுத்ததால், மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு தப்பி ஓடியுள்ளார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு, குற்றவாளியை உடனடியாக கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சா லையை முற்றுகையிட்டு சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் வெங்கடேசை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக காவலில் வைத்திருந்தபோது, அவரை வேறு இடத்துக்கு மாற்றும் நிலையில், அவர் 2 போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரது கால்களில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரால் காயமடைந்த போலீசாரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source link