பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவு – எல்.முருகன் இரங்கல்

சென்னை,

பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில் உள்ள பிரீச்கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுவாச பிரச்சினை இருந்ததால், செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது மறைவுக்கு பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், மத்திய இணை மந்திரி எல்.முருகன் பழம்பெரும் பாடகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்தியத் திரையுலகின் பிண்ணனிப் பாடகரும், பல்லாயிரக்கணக்கான இனிமையான பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரருமான பத்ம விபூஷன் ஆஷா போஸ்லே இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தனது இனிய குரலின் மூலம், மொழிகள் கடந்து இந்திய சினிமா ரசிகர்களை கவர்ந்த ஆஷா போஸ்லே, தாதாசாகேப் பால்கே விருது போன்ற ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

ஓம் சாந்தி!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link