கூட்டணி கட்சியினர் பரமக்குடியில் எங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்றால்.. கிருஷ்ணசாமி எச்சரிக்கை

பரமக்குடி,

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாட்டுக்கு பின் மாவட்டந்தோ றும் நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். தமிழகத்தில் 22 மாவட்டங்களில் புதிய தமிழகம் கட்சிக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. 10 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள கட்சியினர்கூட தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்து, 36 நாட்களாக காத்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. அந்த சமயத்தில் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்.

சட்டசபை தேர்தலுக்கு பின்பு தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும். 2026-ல் ஒரு கட்சி மட்டுமே ஆட்சியில் அமரக்கூடாது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு கேட்போம். அதனை கொடுக்கும் கூட்டணியில் அங்கம் வகிப்போம். வாக்குகளை அளித்து விட்டு, கோரிக்கைக்காக கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என நினைக்கிறோம்.

கூட்டணி ஆட்சி இல்லை என்றால் அந்த ஆட்சி தமிழக மக்களின் நல் வாழ்வுக்கான ஆட்சியாக இருக்காது. எனவே, கூட்டணி ஆட்சி அமைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணி அரசாக இருந்தால்தான் அது மக்களுக்கான அரசாக இருக்கும். கடந்த தேர்தலில் கூட்டணி வைத்ததால் கசப்பான அனுபவங்கள் ஏற்பட் டது. நாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த தேர்தலில் பரமக்குடி தொகுதியில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.

முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளில் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லை. மயானம், சாலை வசதிகள் இல்லை. இந்நிலை மாற வேண்டும். தனித்தொகுதி களில் புதிய தமிழகம்தான் போட்டியிட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு. யாரை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெளிவாக தெரியும். தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.

புதிய தமிழகம் கட்சி வெற்றி பெறுவதற்கு கூட்டணி கட்சிகள் ஒத்துழைப்பு தருவதில்லை. நேர்மையுடன் பணிபுரிந்திருந்தால் 2014, 2019, 2024 தேர்தல்களில் வெற்றி பெற்றிருப்பேன் கூட்டணிக் கட்சியினர் பரமக்குடியில் எங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்றால் முதுகுளத்தூர், ராமநாதபுரத்தில் நிற்பவரை தோற்கடிப்போம். கூட்டணி அமைப்பது எளிது. ஆனால் ஒத்துழைப்பு பெறுவது மிகவும் கடினம். அதனாலேயே கூட்டணியை அமைப்பதற்கு தாமதம் ஆகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link