போபால்,
மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடசராய் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிக்ரதலாப் கிராமத்திற்கு அருகே ஜபல்பூர்–அமர்கண்டக் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த பிக்-அப் வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனதால், அதனை சரிசெய்ய சாலையோரம் நின்றிருந்த போது, அவ்வழியாக வேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதியது. இதில் பிக்-அப் வாகன டிரைவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்குக் காரணமான லாரி டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
